பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஸ்பெஷல் நாடக நடிப்பு

நீண்ட காலம் நாடகத்தில் நடித்துவிட்டு, ஊரில் வந்து வேறு வேலை எதுவுமின்றி இருந்ததால், நாஞ்சில் நாட்டிலுள்ள நாடக நண்பர்கள் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். பெரியண்ணா இதை விரும்பவில்லை. இந்தத் தொந்தரவு அடிக்கடி ஏற்பட்டதால் தவிர்க்க முடியாமல் இரு நாடகங்களில் நடிக்க நேர்ந்தது. ஒன்று அல்லி அர்ஜூனா, மற்றொன்று சதாரம். ஸ்பெஷல் நாடக அனுபவம் எனக்கில்லை. என்றாலும் ஏராளமான ஸ்பெஷல் நாடகங்களைப் பார்த்திருப்பதால் சமாளித்துக் கொள்ளலாம் என்ற துணிவோடு ஒப்புக் கொண்டேன். முதல் நாடகம் அல்லி அர்ஜூனா, சுசீந்திரத்தை அடுத்த தாமரைக் குளத்தில் நடந்தது. என் தந்தையாரோடு இளமையில் நடித்த ஐயப்பன் உடையார் பிள்ளை, அன்று ஸ்ரீ கிருஷ்ணனக நடித்தார். நான் அர்ஜுனன், நாஞ்சில் நாட்டில் அப்பொழுது பிரபலமாய் இருந்த நாகர் கோவில் லக்ஷ்மி அல்லியாக நடித்தார்.

ஒசரவிளை உடையார்பிள்ளை

இவர் நாஞ்சில் நாட்டில் குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியர். மிகச்சிறந்த ஐயப்பசுவாமி பக்தர். எப்போதும் இவருடைய வாய் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று துதித்த வண்ணமிருக்கும். நவாப் இராஜமாணிக்கம் கம்பெனிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் நாடகத்தை எழுதிப் பயிற்றுவித்தவர் இவரே தாம். மேலும் இவர் தம் பெரு முயற்சியால் நிதி வசூலித்து, இறுதியாகத் தாம் வாழ்ந்து வந்த கடுக்கரை என்ற சிற்றுாரில் ஐயப்ப சாமிக்கு ஒர் ஆலயம் அமைத்துள்ளார். இவர் என் தந்தைக்கு மிகவும் வேண்டியவராதலால் என்னைக் கண்டதும் அன்பு பாராட்டி அணைத்துக்கொண்டு பாசமும் பரிவும் காட்டினார்.