பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீலகிரி மலை


1935 ஏப்ரல் 19ஆம் நாள் பிற்பகல் எல்லோரும் புறப்பட்டு இரவு ஏழு மணிக்கு உதகமண்டலம் என்று அழைக்கப்படும் நீலகிரிமலைக்கு வந்து சேர்ந்தோம். அதுவரை அனுபவித்திராத கடுங்குளிர் எங்களை மிகவும் வருத்தியது. இரவு நேரமானதால் எல்லோரும் கஷ்டப்பட்டார்கள். நாடகம் நடைபெறும் இடமாகிய புளு மவுண்டன் தியேட்டருக்கு அருகிலேயே கம்பெனி வீடு இருந்தது. கொட்டகையின் பின்புற வழியாகவே கம்பெனி வீட்டுக்குப் போய்விடலாம். இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

முதல் நாள் இரவை எப்படியோ கழித்தோம். மறுநாள் வாடகைக்குக் கம்பளிகள் கொடுக்கும் ஒரு கடைக்குச் சென்று சில கம்பளிகளையும், உல்லன் மப்ளர்களையும், பனியன்களையும் வாங்கி வந்தார்கள். நான்கு பேருக்கு ஒரு கம்பளி வீதம் போர்த்திக் கொண்டுதான் உறங்குவது வழக்கம். அவ்வளவு கடுமையான குளிர்.

நாடகம் தொடங்கியது. முதல் நாடகம் சந்திரகாந்தா நடந்தது. நாங்கள் அதிகமான வசூலை எதிர்பார்க்கவில்லை. ஆனால், எதிர்பார்த்ததைவிட பரம மோசமாக இருந்தது வசூல். குளிரில் நடிப்பது சிலருக்கு மரண வேதனையாக இருந்தது. என்ன செய்வது? வேறு வழியின்றி நடித்தோம். நீலகிரி மிக அழகான பிரதேசம். அங்கு வசிப்பவர்கள் அங்குள்ள குளிருக்கேற்ற உடைகளை அணிந்து கொண்டு வாழ்கிறார்கள். வாடகைக்கு வாங்கிய உடைகள் மிகவும் கிழிந்து போனவையாதலால் வெளியே போக வர அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. தியேட்டரையும் கம்பெனி வீட்டையும் தவிர நடிகர்கள் எங்குமே போகவில்லை.