பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

 விளக்குகளைப் போட்டுச் சரிசெய்யச் சில நிமிடங்கள் ஆயின. எவ்வளவு நாழிதான் இந்தக் கோலத்தில் நிற்பது? இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஒத்திகையில் வந்த சிரிப்பு மீண்டும் தலையாட்டும்போல் தோன்றியது. கொஞ்சம் விலகி நின்று கொண்டேன். ‘ரெடி’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிய ராஜா, நான் சற்று விலகி நிற்பதைக் கண்டு அருகில் வந்து எங்கள் இருவரையும் பிடித்துச் சேர்த்து வைத்துவிட்டு, பட முதலாளி எஸ். கே. அவர்களை நோக்கி, நல்ல பையன்களைப் பிடித்துக் கொண்டு வந்தீர்களேயா!... அழகான இந்தப் பெண்ணை அணைக்கத் தெரியாமல் முழிக்கிறானே! ... என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார். இப்படியாக என் சொந்த மனைவியிடம் காதல் செய்யும் படலம் ஒருவாறு முடிந்தது. அடுத்தது இன்றாெருவன் மனைவியைப் பலாத்காரம் செய்யும் படலம். சொந்த மனைவியிடமே காதல் செய்யக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த நான், இன்னொருவன் மனைவியைத் தூக்கிக் கொண்டுவந்து எப்படித்தான் பலாத்காரம் செய்வதாக நடிக்கப் போகிறேனோ என்ற டைரக்டரின் திருவாக்குப்படி விழித்துக் கொண்டிருந்தேன்.

பலாத்காரக் காட்சி

நைனமுகம்மது மேனகாவை எட்டிப் பிடிக்கப் போகும் பொழுது மேனகா அவனை ஆத்திரத்தோடு கீழே தள்ளுவதாக ஒரு கட்டம். இது எங்கள் நாடகக்தில் இல்லாதது. மேனகாவாக நடித்த எம்.எஸ். விஜயாள் என்னைத் தள்ளினார். அவர் தள்ளியதில் சிறிதும் பலம் இல்லாததால் நான் வேண்டுமென்றே கீழே விழுவது போலிருந்தது. நடிப்பு இயற்கையாக இல்லையென்று கூறி ராஜா இரண்டாவது முறையும் அதை எடுத்தார். வேகமாக என்னைத் தள்ள விஜயாள் அஞ்சுகிறார் என்று எண்ணிய நான், அன்றுதான் முதன் முறையாகத் துணிந்து விஜயாளிடம் பேசினேன்,

“அம்மா, நல்ல பலத்தோடு தள்ளுங்கள். நான் சமாளித் கொள்கிறேன். பரவாயில்லை”.