பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305

என்று ரகசியமாகக் கூறினேன். மீண்டும் ஒத்திகை நடந்தது. விஜயாள் முழுப் பலத்தோடு என்னைத் தள்ளுவாரென்று எண்ணி நான் வேகமாக அவரைப் பிடிக்கச் சென்றேன். அவர் தள்ளியது முன்போலவே இருந்ததால், விரைந்து சென்ற நான் அவர் மார்போடு மோதிக் கொள்ள நேர்ந்தது. விஜயாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

“சீனில் குஸ்தி போட எனக்குத் தெரியாது” என்றார், அந்த நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை எடுக்கப்பட்டு முடிந்தது. அடுத்த ‘ஷாட்’டுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு புறம் அமர்ந்து நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தேன். வேண்டுமென்றே நான் மோதிக்கொண்டதாக விஜயாள் எண்ணியிருக்க வேண்டும்! அதனால்தான் ‘குஸ்திபோட எனக்குத் தெரியாது’ என்று கோபித்துக் கொண்டிருக்கிறார்.

தேம்பி அழுதேன்

இதை நினைத்ததும் எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வந்து விட்டது. முதல் ஒத்திகையில் சிரிப்பை எப்படி நிறுத்த முடியவில்லையோ அதேபோல் அன்று அழுகையையும் என்னால் நிறுத்த முடியாமல் போயிற்று. நம்மைப்பற்றி விஜயாள் தவறாக நினைக்கும்படி நடந்துவிட்டோமே என்பதை எண்ணியெண்ணி அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். விஷயமறிந்த ராஜா என்ன அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். எஸ். கே., சோமு எல்லோரும் என்னைச் சமாதானப்படுத்தினார்கள். அன்று ஸ்டுடியோவில் சகோதரர்கள் யாருமில்லை. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஏங்கினேன். ஸ்டூடியோ முழுவதும் விஜயாளியின் மீது சினந்தது. அவருடைய தாயார்கூட அவரைக் கண்டித்தாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அழுது தீர்த்த பின்னரே என்னால் நடிக்க முடிந்தது. அன்று அப்படி அழுததை எண்ணினால் இன்றுகூட வெட்கமாக இருக்கிறது! பல நாட்களுக்குப் பின் எங்கள் மேனகா நாடகங்களில் ஸ்பெஷலாக நடிக்க எம். எஸ். விஜயாள் வந்தபோதுகூட என்னால் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேச முடியவில்லை.