பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307

 சென்ற அந்தக் காட்சி அப்படியே இருந்தது. விஜயாள் கீழே விழுந்ததை மாத்திரம் வெட்டி விட்டார்.

தீண்டாத காதல்

மற்றொரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. சாமா ஐயராக நடித்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், தாசி கமலம் வீட்டில் அகப்பட்டுக் கொள்ளும் ரசமான காட்சி. முதலில் சாமாவுக்கும் கமலத்துக்கும் சிங்காரப் பேச்சுகள் நடக்கின்றன. இறுதியில் திருடர்கள் சாமாவைப் பிடித்து அடித்துச் சாக்குப் பையில் போட்டுக் கட்டி விடுகிறார்கள். இதை வேடிக்கை பார்க்க எங்கள் நடிகர்கள் பலரும் கூடியிருந்தார்கள். மேனகா நாடகத்தில் நான் முதலில் நைனமுகமதுவாக நடித்துவிட்டுப் பிற் பகுதியில் தாசி கமலாவாகவும், நடிப்பேன். எனவே என்னோடு நடித்த என். எஸ். கே. பெண்ணாேடு எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்த்து ரசிக்க எல்லோரையும் விட எனக்கு ஆவல் அதிகமாக இருந்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. டைரக்டர் ராஜா சுறுசுறுப்பாக வேலை செய்தார். சாமா ஐயரும் தாசி கமலமும் கட்டிலில் அமர்ந்தார்கள்; உரையாடினார்கள். சாமா ஐயர் காதல் பாட்டுப் பாடினார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க நின்ற நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் படாதிபதிகளான எஸ். கே. மொய்தீனும், எம். சோமசுந்தரமும் செய்வது புரியாமல் விழித்தார்கள், நான் கலைவாணரை வியப்புடன் பார்த்தேன். கலைவாணர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தக் சிரிப்பில் சினமும் கலத்திருந்ததை நான் உணர்ந்தேன். காரணம் என்ன தெரியுமா? படப் பிடிப்பு நாங்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடந்தது. சாமா ஐயரை மயக்கிக் கொள்ளை யடிக்கும் நோக்கோடு அழைத்து வந்த தாசி கமலம், சாமாவைத் தொடவும் இல்லை; அவர் பக்கத்தில் நெருங்கி உட்காரவும் இல்லை. தீண்டாத காதலாக இருந்தது. ஒரு முழத் தூரத்திலேயே இருந்தபடி எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார்.