பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308


படாதிபதிகளின் ஏமாற்றம்

நாடகத்தில் நானும், என். எஸ். கேயும் இந்தக் காட்சியில் நடிப்பதைப் பல முறையும் பார்த்து ரசித்திருந்த படாதிபதிகள் அதைவிடச் சிறப்பாக சினிமாக் காட்சி அமையுமென எதிர்பார்த் திருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றம். டைரக்டர் ராஜா ஏன் இப்படிச் செய்கிறார் என்று புரியவில்லை. ஆத்திரமும் கோபமும் அவர்கள் கண்களில் தெரிந்தன . ராஜாவிடம் நெருங்கிப் பேசப் பயம். நிலைமையைச் சரிப்படுத்த ஒரு வழியும் தோன்றாமல் திகைத்தார்கள்.

சாமாவின் சல்லாபப் பேச்சு முடிந்ததும் திருடர்கள் கட்டிலைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். தாசி கமலம் அவர்களைக் கண்டு பயந்தவள்போல் சாமா ஐயரைக் கட்டிக் கொள்ள வேண்டும். சாமா அவளை அணைத்தபடி திருடர்களோடு போராட வேண்டும்.

டைரக்டர் ராஜா இந்த விவரங்களையெல்லாம் நன்றாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.

“கிருஷ்ணா, நீ இப்படி இருக்கிறே; கமலம் அங்கே நிக்கிரு; திருட்டுப் பசங்க வந்ததும் அவ பயந்து ஓடி வந்து உன்னைக் கட்டிக்கிறா. நீ உடனே வீராவேசத்தோட திருடனுங்க மேலே பாயனும்” -

என்று சொல்லிவிட்டுக் காமிரா அருகில் சென்றார். கலைவாணர் அதுவரையில் அடக்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் சினமும் அமைதியாக வெளிவரத் தொடங்கின.

“எல்லாம் சரி; ஆனா, அந்த அம்மா வந்து என்னைக் கட்டிக்காதபடி வேறே ஏதாவது வழி பண்ணாங்கோ”......என்றார்.

நான் பதிவிரதன் !

என். எஸ். கே. யின் இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜா திடுக்கிட்டார்.

ஸ்டுடியோவில் பூரண அமைதி நிலவியது. நாங்கள் எல்லோரும் ராஜாவின் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றோம்.