பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337

 மிக உருக்கமான பாடல் இது. இப்பாடலைப் பதிபக்தி நாட கத்தில் தேயிலைத் தோட்டக் காட்சியிலே நான் பாடுவேன். சபை யோரில் சிலர் கண்ணிர் விட்டு அழுவதைப் பலமுறை பார்த் திருக்கிறேன். ஜீவாவின் பாடல்களில்,

“ஏழைத் தொழிலாளர் வாழ்வு இன்பம் சூழ்கவே”
“காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை”

ஆகிய இரு பாடல்களும் அந்நாளில் நான் பாடிய பாடல் களில் சிறப்பும், முதன்மையும் பெற்ற பாடல்களாகும். சபையோர் இவ்விரு பாடல்களையும் விரும்பிக் கேட்பது வழக்கம். எனவே, எந்த நாடகம் நடந்தாலும் இந்தப் பாடல்களை நான் அடிக்கடி பாட நேர்ந்தது.

மயில்ராவணனில் தொழிலாளர் வாழ்வு

ஒருநாள் மயில்ராவணன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நான் ராமராக நடித்தேன். சபையிலிருந்து ஏழைத் தொழிலாளர் வாழ்வு என்ற குரல் எழுந்தது. இன்னும் சில குரல்கள் காலுக்குச் செருப்புமில்லை என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். “இந்த வேடத்தில் நின்றுகொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை. அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் வந்து பாடுகிறேன்” என்றேன். மக்கள் என் பேச்சைக் கைதட்டி வரவேற்றார்கள். நாடகம் முடிந்தது. சபையில் யாரும் எழுந்திருக்கவில்லை. வாக்களித்தபடி வேடத்தைக் கலைத்துவிட்டு வந்து, நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். சபையோர் அமைதியாக இருந்து கேட்டுவிட்டுக் கலைந்து சென்றனார்.