பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

341



போது, தமிழகத்தைச் சேரவேண்டிய சித்துார் மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்த்துக்கொண்டார்கள். இந்த அநீதத்தை எதிர்த்துத் தமிழரசுக் கழகம் பெரும் போராட்டம் நடத்தியபிறகு அதில் ஒரு பகுதியாகிய திருத்தணி தாலுகா இப்போது நமக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. சித்துரர் மக்களில் பெரும்பாலோர் தமிழர்கள். நெல்லூர், சித்தூர் முதலிய நகரங்களில் எல்லாம் அந்த நாளில் தமிழ் நாடகங்கள் மாதக்கணக்கில் வெற்றிகரமாக நடை பெற்றிருக்கின்றன. ஆந்திரர்களோடு போராடி நியாயத்திற்காக வாதாடும் ஆற்றல் நம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இல்லாததாலும் இந்த உரிமையை அறிவுறுத்தும் முறையில் தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டங்களுக்குக் காங்கிரஸ் அமைச்சர்களின் தார்மீக ஆதரவு கூட இல்லாததாலும்தான் அந்தத் தமிழ்ப்பகுதிகளை நாம் இழக்க நேர்ந்தது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமருங் காலத்தில் இழந்த திருப்பதி வேங்கட எல்லையை மீண்டும் பெற்று மகாகவிபாரதி கூறியபடி “குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு'’ நம் தாயகமாக அமைய வேண்டுமென்பதே என் கருத்தாகும்.

சித்துாரில் இரண்டு மாதங்கள் வெற்றிகரமாக நாடகங்களை நடத்தினோம். அது வேறுமொழி பேசப்படும் பகுதி என்னும் எண்ணமே எங்களுக்கு ஏற்படவில்லை. சித்துரரில் கிருஷ்ண லீலாவுக்கு மேலும் புதிய உடைகள் தயாராயின. எல்லா நாடகங்களையும் விட கிருஷ்ண லீலாவுக்கு அமோகமான வசூலாயிற்று. வந்தவருவாய் முழுவதும் காட்சிகள் உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட்டோம்.

நாடகம் தினசரி நடைபெறத் தொடங்கிவிட்டதால் ‘அறிவுச்சுடர்’ பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவது சிரமமாகி விட்டது. இதற்காக இரவும் பகலும் கண் விழிக்க நேர்ந்ததால் உடல் நலம் குன்றியது. ஏற்கனவே இருந்து வந்த கைவலி அதிகமாயிற்று. எனவே 1.10.38ல் வெளியிட்ட இதழோடு பத்திரிக்கையை நிறுத்திக்கொண்டேன்.