பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354



மணவை திருமலைசாமி

மணவை ரெ. திருமாலைசாமி அவர்களின் நகர தூதன் ஏட்டுக்காக 29.12.39.ல் நடந்த நாடகத்திற்குப் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தலைமை வகித்தார்கள். அன்பர் திருமலைசாமி ஒரு சிறந்த எழுத்தாளர். நகர தூதனில் ‘பேணு நர்த்தனம்’ என்னும் தலைப்பில், அவர் எழுதிவந்த அரசியல் கட்டுரைகள் அந்த நாளில் மிகவும் கவர்ந்தன. பிரபல எழுத்தாளராகிய கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மணவை திருமலைசாமி அவர்களின் எழுத்தாற்றலைப் பற்றி அடியில் வருமாறு பாராட்டியுள்ளார்.

“திருச்சி நகர தூதன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ‘பேனாநர்த்தனம்’ என்னும் தலைப்பில் ஒருவர் எழுதுகிறாரே, அவர் மிகவும் பொல்லாத எழுத்தாளர். அவருடைய பேனாநர்த்தனத்தில் பரத நாட்டியத்திலேயுள்ள சகல ஜதி வகைகளையும் காணலாம். அப்படித் துள்ளிக் குதிக்கும் வேகமுள்ள தமிழ் நடையில் எதிர்க்கட்சிகாரர்களையும், எதிர்க் கட்சிக் கொள்கைகளையும் அவர் தாக்குவார். நானும் பார்த்து வருகிறேன்; சென்ற இருபது ஆண்டுக்கு மேலாக அவருடைய கொள்கையும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. அவருடைய தமிழ் நடையும் ஒரேவித நோக்கமுள்ளதாய் இருந்து வருகிறது. இவரால் தாக்கப்படுகின்ற மனிதர் நல்ல ரசிகராக மட்டும் இருந்தால் ‘'தாக்கப்பட்டாலும் இப்படிப் பட்ட பேனாவினாலல்லவா தாக்கப்பட வேண்டும்’ என்று அவருக்கு எண்ணத் தோன்றும்.”

1947இல் இவ்வாறு ரா. கிருஷ்ண மூர்த்தி பாராட்டினாரென்றால் அவருடைய அபாரமான எழுத்தாற்றலுக்கு வேறன்ன நற்சான்று வேண்டும்? அன்று நாடகத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் கூறிய மொழிகள், எனக்கு நன்முக நினைவிலுள்ளன. “நான் டி. கே. எஸ். சகோதரர்களை எவ்வளவோ பாராட்டியிருக்கிறேன். விருந்துகள் நடத்தியிருக்கிறேன். என் பத்திரிக்கைக்கு அவர்கள் இப்படி நாடகம் நடத்திக் கொடுத்ததில்லை. மணவை திருமலைசாமி நிரம்பவும் கெட்டிக்காரர். எனக்குக்கிடைக்காத அந்தநிதி-உதவி அவருடையப்பத்திரிகைக்குக் கிடைத்துவிட்டதே!” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

திருச்சி நாடகம் முடிந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.