பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360



முன்பணம் பெற முயற்சி!

நாகர்கோவிலில் நான்கு நாட்கள் இருந்தோம். 18ஆம் தேதி திண்டுக்கல் திரும்பி நாடகத்தில் பங்கு கொண்டோம். நாலைந்து நாடகங்களில் நடித்துவிட்டு மீண்டும் கோவை சென்றுபடப்பிடிப்பில் ஈடுபட்டேன். முன்னரே திட்டமிட்டபடி என்னுடைய படப் பிடிப்பின் வசதியை முன்னிட்டுக் கம்பெனி திருப்பூரில் முகாம் இட்டது. கோவை பிரிமியர் சினிடோன் கூட்டுறவோடு குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுப்பதற்குரிய ஆயத்தங்களைச் சின்னண்ணா செய்து வந்தார். பொருளாதார நிலை சரியில்லாததால் பெரியண்ணாவுக்குப் படப்பிடிப்பில் விருப்பமில்லை, என்றாலும் இளையவரின் முயற்சியை அவர் தடை செய்யவில்லை. சின்னண்ணா சென்னை சென்று திரு எஸ். எஸ். வாசனைக் கண்டு பேசினார். குமாஸ்தாவின் பெண் படத்தின் விநியோக உரிமையை அவருக்கு அளிக்கவும், முன்கூட்டியே பணம் பெறுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.

அரங்க நாடகம் அச்சேறியது

கம்பெனி திருப்பூருக்கு வந்தது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. திரைப்படத்தில் நடிப்பது என்னதான் வருவாய்க்குரியதாக இருந்தாலும் என்னுடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்தது. கம்பெனி தளர் நடைவிட்டுக் குதித்தோடும் பருவத்தில் இருந்ததால் எனக்கும் சொந்தப் படப்பிடிப்பில் அவ்வளவு சிரத்தை ஏற்படவில்லை. ஆயினும் சின்னண்ணா முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேவையில் இரவு படப்பிடிப்பு இல்லையென்றால் நான் உடனே திருப்பூருக்குக் காரில் வந்துவிடுவேன். அரங்கில் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண்நாடகத்தை அச்சில் கொண்டு வரவும் முயன்றேன். திருப்பூரில் குமாஸ்தாவின் பெண் நாடகம் நடைபெற்றபோது, அந்நாடகம் திருப்பூர் யூனியன் அச்சகத்தில் அச்சாகி நூல் வடிவிலும் வெளிவந்தது.

படாதிபதிகள் திட்டமிட்டபடி பூலோகரம்பை படம் மூன்று மாதங்களில் முடியவில்லை. எனவே அதனை அனுசரித்து நாங்களும் உடனே கோவையில் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைத் தொடங்க முடிவு செய்தோம்.