பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366


பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிவு பெறாத நிலையிலேயே குமாஸ்தாவின் பெண் படப்பிடிப்பு வேலையும் தொடங்கியதால் இருபடங்களிலும், அத்துடன் நாடகங்களிலும் நடிக்கவேண்டிய, நெருக்கடி எனக்கு ஏற்பட்டது.

உதட்டுக்கோபமும், உள்ளத் தூய்மையும்

ஒருநாள் பூலோகரம்பை படப்பிடிப்பின்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்; அப்போது குமாஸ்தாவின் பெண்ணில் நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றி அவர் மிகுந்த வேதனைப்பட்டார். “மேனகா, பாலாமணி படங்களில் நானும் நடிக்க வேண்டுமென்று நீங்களே பட அதிபர்களை வற்புறுத்தி அழைத்தீர்கள். சொந்தப் படம் எடுக்கும் இப்போது மட்டும் என்னை அழைக்காதது ஏன்?” என்று கேட்டார். நியாயமான கேள்விதான். இதற்கு நான் எப்படிப் பதில் அளிக்க முடியும்? ஒரு முறை குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்புக்கு அவர் வந்தால் பெரியண்ணாவோடு ஏற்கனவே ஏற்பட்டிருந்த மனத் தாங்கல் தீருமென எண்ணினேன். வரும்படியாக வற்புறுத்தி அழைத்தேன். என் அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கொஞ்சம் கோபத்தோடு பேசினார். “குமாஸ்தாவின் பெண் படக் கதைதானே உங்களுக்குச் சொந்தமானது. அதிலுள்ள டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை வேறு யார் எடுத்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்.

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்றேன் நான்.

“அந்தக் காட்சியை நானே உங்கள் படம் வருவதற்குமுன் எடுத்து வெளியிடப் போகிறேன்” என்றார்.

அவருடைய இந்தப் பதில் எனக்குச் சிறிது வேதனையைத் தந்தது என்றாலும் நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தேன். அவரே மேலும் பேசினார். “கண்டிப்பாக டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை நான் எடுக்கத்தான் போகிறேன்"