பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368


நாட்டில்தான் இப்படியுள்ள கலவரங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகள்போல் வாழும்தமிழ்நாட்டிலும் இப்படியொருநினைவு ஏற்பட்டுவிட்டதே என்று மிகவும் வருந்தினேன். கம்பெனியைப் பொறுத்தவரை இது எதிர்பாராத நஷ்டத்தையே அளித்தது.

நாலேந்து நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இராஜபாளையம் வந்து சேர்ந்தேன். இராஜபாளையத்தில் சற்றும் எதிர் பாராத வகையில் முதல் நாடகம் இராமாயணத்துக்கு நல்லவசூலாயிற்று. தொடர்ந்து குமாஸ்தாவின்பெண் நாடகம் நடந்தது. அதற்கும் சிறந்த வரவேற்பு.

இராஜபாளையம் நல்ல ரசிகர்கள் நிறைந்த இடம். குமாஸ்தா இராசாமி ஐயராக கம்பெனியின் பழம் பெரும் நடிகர் சிவகங்கை நடராஜன் நடித்தார். மிகச் சிறந்த நடிகர் இவர். உருக்கமாக நடிப்பார். வறுமை நிறைந்த தமது குடும்பத்தைத் தவிக்கவிட்டு ஐயர் மரணமடையும் காட்சியில் நானே உள்ளேயிருந்து அழுவேன். அவையோரும் கண்கலங்குவார்கள். இக்காட்சியில் பெரும்பாலும் சபையோரின் ரசனையை நான் உள்ளிருந்தபடியே, எங்கள் ரகசியத் துளைகளின் வழியாகப் பார்ப்பது வழக்கம். இராஜபாளையம் ரசிகர்கள் இக்காட்சியில் தேம்பித் தேம்பியழுதார்கள். குமாஸ்தாவின் பெண் 20 நாட்கள் நடந்தன.

மதுரைக் கலவரம் ஒருவாறு அடங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. இராஜபாளையம் நாடகத்தை முடித்துக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தோம்.