பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390


நாடகம் நாடக உலக வரலாற்றிலேயே அழியாத இடம் பெற்று விட்டது. இத்தனைச் சிறப்புக்களையும் பெற்ற ஒளவையாரின் பாத்திரத்தைத் தாங்கி நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததும், இதைப் பற்றிய விவரங்களும் மிகச் சுவையானவை.

ஒளவையாராக யார் நடிப்பது? ... இரண்டொரு நாட்கள் இதைப்பற்றி நன்கு விவாதித்தோம். அப்போது ஆசிரியராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் இருந்த சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், நானும் தனியே இருந்து பலமுறை இதைப் பற்றிப் பேசினோம். முடிவு காண இயலவில்லை. குழுவின் முக்கிய நடிகர் கே. ஆர். இராமசாமி சிறுவதில் மேனகாவாகவும்; மற்றும் சில நாடகங்களில் கதாநாயகியாகவும் திறம்பெற நடித்தவர். எல்லோரையும்விட நன்றாகப் பாடும் ஆற்றல் அவருக்கிருந்தது. ஒளவைக்கு விருத்தப் பாக்கள் அதிகமாக இருந்தமையால் கே. ஆர். இராமசாமியை ஒளவையாராகப் போடுமாறு அண்ணாவிடம் ஆலோசனை கூறினேன். இதுபற்றி நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆரிடம் கேட்டபோது, அவர் “ஐயையோ, நான் பெண் வேடம் புனைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அந்தப் பழக்கமெல்லாம் எனக்கு இப்போது வராது. நான் நடித்தால் நன்றாய் இராது” என்று உறுதியாகச் சொல்லி மறுத்துவிட்டார். நானும் இளமையில் பெண்வேடம் பூண்டவன். அஃது பழைய கதையாதலால் என்னை ஒளவையாராய்ப் போட வேண்டுமென்ற எண்ணமே யாருக்கும் எழவில்லை.

கடைசியாக ஒருநாள், ‘இன்று யாரையாவது ஒருவரை முடிவு செய்வது; அல்லது நாடகத்தையே கைவிடுவது’ என்ற தீர்மானத்துடன் சின்னண்ணாவும் நானும் கலந்து பேசினோம். எங்கள் குழுவிலுள்ள ஒரே பெண் நடிகை எம். எஸ். திரெளபதி. அவளோ சிறுபெண். எனவே, வழக்கமாகப் பெண் வேடம் தாங்கிவந்த நடிகர்களில் ஒருவர்தான் போட வேண்டும். அவர்களில் நன்றாகப் பாடக்கூடியவர்கள் யாருமில்லை. ஏ. பி. நாக ராஜன் அப்போது சேலத்துக்குப் போயிருந்தார். அவர் மீண்டும் கம்பெனிக்குத் திரும்புவது சந்தேகமாக இருந்தது. எனவே எவரையும் உறுதி செய்ய இயலாமல் திண்டாடினோம். என் வரையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.