பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392


இவ்வளவு தூரம் இந்தப் பாத்திரத்தைப் பற்றி என்னிடம் விளக்குகிறாயே; நீயே ஒளவையாராக நடித்தால் என்ன?” என்றார்.

அதிர்ச்சியும் துணிவும்

நான் அதிர்ச்சியடைந்தேன். அண்ணா இப்படிச் சொல்வா ரென்று எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ சொல்லி மறுத்தேன். சிறிது நேரம் வாதம் நடந்தது. இறுதியாக அவர் எழுந்து,

“ஒளவையார் வேடத்தை நீ புனைவதாக இருந்தால் நாடகத்தை நடத்துவோம்; இல்லாவிட்டால் இந்த நாடகமே வேண்டாம்”

என்று சொல்லிப்போய் விட்டார். ஒளவையாரை அரங்கில் காணத்துடித்த என் உள்ளத்திற்கு, இதுபெரும் சோதனையாகவே இருந்தது. நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒளவையார் நாடகம் நடைபெறப் போவதில்லை! இந்த நிலை எனக்கு மிகவும் வேதனையைத் தந்தது. தனியே இருந்து சில மணி நேரம் சிந்தித்தேன். சோதனையில் தேறினேன். துணிவோடு அண்ணாவிடம் சென்றேன். “நானே ஒளவையாராக நடிக்கிறேன்” என ஏற்றுக் கொண்டேன்.

அதே நினைவு; அதே சிந்தனை

அன்று முதல் இரவும் பகலும் ஔவையைப் பற்றியே சிந்தித்தேன். ஔவை மூதாட்டியைப் பற்றி அறிஞர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தேன். வீதிகளில் போகும் போதும் வரும்போதும் வயது முதிர்ந்தோர் எதிர்ப்பட்டால் சற்று நின்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவேன். மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதுகூட, சபையில் எதிரேவீற்றிருக்கும் பாட்டிமார்களின் உருவங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. ஒளவையைப் பற்றியே நாள்தோறும் சிந்தித்துச் சிந்தித்துத் தெளிவு பெற முயன்றேன்.

கம்பெனி நடிகர் பி. எஸ். வேங்கடாசலம் மாம்பழக் கவிச் சிங்க நாவலரின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஒளவை நாடகத்திற்குப் பாடல்கள் இயற்றும் பொறுப்பினைத் தமக்கு அளிக்க