பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


புலங்திரன் எங்கே?

பவளக்கொடி நாடகத்தில் நான் புலந்திரனக நடிப்பேன். முதல் காட்சியில் வந்து, தாயார் அல்லி மகாராணியிடம் பவள ரதம் வேண்டுமென்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். பிறகு நாடகத்தின் கடைசியில்தான் புலந்திரன் வரவேண்டும். சுமார் நான்கு மணிநேர இடைவேளை இருக்கிறது. அத்தனைநேரம் என்னால் எப்படி விழித்துக் கொண்டிருக்க முடியும்! நாடகம் அந்த நாளிலெல்லாம் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகி ஏறத்தாழ இரவு 2.30 மணிக்கு முடிவுபெறும். பக்கத் தட்டிகளின் ஒரத்தில் நின்று பார்ப்பேன். தவிர்க்க முடியாத நிலையில் தூக்கம் வந்து என் கண்களைத் தழுவிக் கொள்ளும். யாருக்கும் தெரியாதபடி எங்காவது ஒரு மறைவில் படுத்து உறங்கிவிடுவேன். நான் வர வேண்டிய காட்சிக்கு முன்பாகவே என் தந்தையார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து எழுப்பி விடுவார். இதுவே வழக்கம்.

விருதுப்பட்டியில் ஒரு நாள் பவளக்கொடி நாடகம் நடை பெற்றபோது நான் படுத்துறங்கிய இடம் யாருக்கும் தெரியாது போயிற்று புலந்திரன் காட்சி வருவதற்கு முன்பே என்னைத் தேடத் தொடங்கியவர்கள், அந்தக் காட்சி வரும்வரையில் கண்டு பிடிக்கவில்லை. காட்சியும் வந்துவிட்டது. புலந்திரனைக் காணோம். என்ன செய்வார்கள்!

“எங்கே புலந்திரன்? எங்கே ஷண்முகம்?” என்று தேடினார்கள். கடைசியாக அல்லிவேடம் புனைந்திருந்த நடிகரே என்னைக் கண்டுபிடித்தார். உறக்கம் கலைக்கப்பட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் தெளிவுபெற்றேன். சுவாமிகள் என்ன செய்வாரோ வென்று பயந்து நடுங்கினேன். காட்சி முடிந்து வந்ததும் சுவாமிகள் என்னைத் தட்டிக் கொடுத்து “டே சின்னப் பயலே! இனிமேல் எல்லோருக்கும் தெரியும் படியான இடத்தில் படுத்துறங்கு. இப்படி மூலை முடுக்குகளில் கிடந்து உறங்காதே” என்று அன்போடு கூறினார். அன்று முதல் பவளக்கொடி நாடகத்தில் மட்டும் பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் உறங்க எனக்கு அனுமதி யளிக்கப்பட்டது.

விளம்பரங்கள்

நாடக சினிமா விளம்பரங்கள் இந்தக் காலத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கின்றன. புதிய புதிய: