பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


“வீரம், சோகம், கோபம் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் மாறி மாறித் தோன்றும்படியாகச் செய்வது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது”.

இவ்வாறு கேள்வியும், விடையுமாக நாடகத்தின் முக்கிய கட்டங்களைப்பற்றியெல்லாம் குறிப்பிட்டு, நீளமான விளம்பர அறிக்கை வெளியிடுவார் சுவாமிகள். இந்த விளம்பரங்களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரும் பைத்தியம்.

மாட்டு வண்டிப் பயணம்

இப்போது நான் சொல்லப் போகும் செய்தி உங்களுக்குப் பெரும் வியப்பாக இருக்கும். கற்பனையல்ல; உண்மையாக நடந்த சம்பவம்.

விருதுப்பட்டிக்குச் சில மைல் தூரத்தில் மல்லாங்கிணறு: என்று ஒரு சிற்றுார். விருதுப்பட்டியில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்தியபின் மல்லாங்கிணறு சென்றோம். அப்போது அந்த ஊருக்குப் போவதற்கு நல்ல பாதையில்லை. பஸ் போக்கு வரத்தெல்லாம் கிடையாது. கரடு முரடான அந்தப் பாதையில் இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்ச் சேர்ந்தோம். பெரியவர்கள் சிலர் வண்டியின் ஆட்டத்திற்குப் பயந்து தமாஷாகப் பேசிக்கொண்டே நடந்து வந்து சேர்ந்தார்கள்.

வேட்டு விளம்பரம்

நாங்கள்போன மறுநாள் நாடகம் வைக்கப்பெற்றிருந்தது. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி. விளம்பர அறிக்கை களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரிய பைத்தியமென்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? நாடக நோட்டீஸ் வேண்டுமென்று சில பெரியவர்களிடம் கேட்டேன். கிடைக்கவில்லை. “இந்த ஊரில் நோட்டிஸ் போடும் வழக்கம் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பெரிய அதிசயமாக இருந்தது. விளம்பரம் ஒன்றும் இல்லாமல் நாடகத்திற்கு மக்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி மனத்தில் எழுந்தது. எவரிடமிருந்தும் சரியான விடை கிடைக்வில்லை.