பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


அப்போதுதான் எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. நடிகர்கள் ஆடிக்கொண்டு வரவேண்டும் என்பதையும், ஆடாத நாடகம் அதுவரை மல்லாங்கிணற்றில் நடந்ததே இல்லை யென்பதையும் தெரிந்து கொண்டோம்.

இந்த நாளிலே கூட நாடகத்தை ‘ஆட்டம்’ என்று சொல்வது வழக்கில் இருந்து வருவதைப் பார்க்கிறோமல்லவா?

அன்றைய நாடகத்தில் எமனுக நடித்த கந்தசாமிக்குப் பிரமாதமான பேர். அவரைத் தவிர மற்ற நடிகர்கள் நன்றாயில்லை யென்று பலரும் பேசிக் கொண்டார்களாம்.

எப்படி வேட்டில் விளம்பரமும் வினோத ஆட்டமும்?

மல்லாங்கிணற்றில் நாடகங்கள் அதிக நாட்கள் நடைபெற வில்லை. வெகு விரைவிலேயே சாத்துரர் போய்ச் சேர்ந்தோம், சாத்துரில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

கம்பெனியின் நடிகர்கள்

அந்த நாட்களில் இப்பொழுது நடைபெறுவதைப் போல் தினசரி நாடகம் கிடையாது, வாரத்திற்கு மூன்று நாட்கள் தான் நாடகங்கள் நடைபெறும். இன்னொரு வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை நாடகம் வைப்பது வழக்கமில்லை. இப்பொழுதெல்லாம் சனி, ஞாயிறுதாம் முக்கியமான நாடக நாட்கள்; அந்தக் கிழமைகளில்தான் வசூலாகும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது . அந்தக் காலத்தில் “பிரதி செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் நாடகம் நடைபெறும்”, “ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை”, “அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்” என்றெல்லாம் விளம்பர அறிவிப்பிலேயே போட்டு விடுவார்கள். ஆக மொத்தம் ஒரு மாதத்தில் பன்னிரண்டு அல்லது பதிமூன்று நாடகங்கள் நடைபெறுவது வழக்கம்.