பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


நடந்தே சென்றோம்

நடிகர்களும் மற்றத் தொழிலாளர்களும் எல்லோருமாக ஏறத்தாழ நாடக சபையின் மொத்த எண்ணிக்கை நூறு பேரிருக்கலாம். நாங்கள் தங்கியிருக்கும் வீடு நாடகக் கொட்டகைக்கு அருகிலிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் எல்லோரும் நடந்தே தான் போய் வருவோம். மாலை நாடகம் என்பதெல்லாம் கிடையாது. எப்போதும் இரவு 9.30 மணிக்குத் தான நாடக ஆரம்பம். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் புறப்படத் தயாராகி விடுவோம். பெரியவர் யாராவது ஒருவர், ஒரு அரிக்கன் விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு முன்னே செல்வார். அவரைப் பின்பற்றி நாங்கள் எல்லோரும் செல்வோம். வீதிகளில் ஆங்காங்கு மினுக்-மினுக்’ கென்று வெளிச்சம் தெரியும், சில இடங்களில் வெளிச்சமே இராது. இருள் சூழ்ந்திருக்கும். பாதை தெரிந்து நடப்பதே கஷ்டமாக இருக்கும்.

எல்லோருக்கும் தலைமுடி

அநேகமாக எல்லா நடிகர்களும் தலைமுடியை நீளமாக வளர்த்திருந்தார்கள். இந்த நாளைப்போல் ‘டோப்பா’ வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற்பட்டதில்லை. ஆண் வேடதாரிகள் தலைமுடியைப் பின்னல் சுருட்டி விட்டுக் கொள்வார்கள். பெண் வேடதாரிகள் கொண்டையோ அல்லது சடையோ போட்டுக் கொள்வார்கள். அபூர்வமாக யாராவது ‘கிராப்புத் தலை ஆசாமி, பெண் வேடம் புனைய வேண்டிய நெருக்கடி ஏற்படுவதுண்டு. அப்பேர்ப்பட்ட சமயத்தில் கம்பெனி யிலிருக்கும் ‘டோப்பா’ அவரது தலையை அலங்கரித்து, அகோரமாகக் காட்சி அளிக்கும். அந்த நடிகரும் தமது டோப்பா வைத்த அழகிய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உடனடியாகத் தலைமுடி வளர்க்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்வார்.

கம்பெனியில் அப்போது முக்கிய வேடங்களைத் தாங்கிய நடிகர்கள் சிலரைப்பற்றி இங்கே குறிப்பிடுவது கடமையெனக் கருதுகிறேன்.