பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


நாடகம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பியதும் இச் செய்தியை அறிந்து இரவு முழுவதும் நடிகர்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிரு.ர்கள். இராமகிருஷ்ணனுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. ஒரு வார காலம் சிரமப் பட்டார். மறுநாள் தந்தையார் மூலம் இந்தப்பேய் விஷயத்தைக் கேட்டதும் தாயாருடன் தனி வீட்டில் இருக்க நேர்ந்ததற்காக நாங்கள் சந்தோஷப்பட்டோம்.

அதன்பிறகு கொட்டகையில் எப்போதும் பேய்க் கதைகள் பேசுவது சகஜமாகிவிட்டது. “நேற்றிரவு 12 மணிக்கு ஒருபெண் தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்பார் ஒரு நடிகர். “விடிய 4 மணிக்குப் பயங்கரமான சத்தம் மூன்று முறைக்கேட்டேன்” என்பார் மற்றொரு நடிகர். இப்படியே நாளடைவில் பேய்க் கலவரம் அதிகமாகி விட்டது. நகைச்சுவை நடிகர் ராமசாமி, ஒரு நாளிரவு வீட்டில் பேயாகவே நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரோடு சண்டைப் போட்டுக் கொண்ட இன்னொரு நடிகரைப் பயமுறுத்துவதற்கு இந்த பேய்க்கலவரத் தைப் பயன்படுத்திக்கொண்டார். அந்தவீட்டில் நெல் போட்டு வைக்கும் பெரிய குதிர் ஒன்று இருந்தது. அந்தக் குதிருக்குள்தான் இரவில் அடிக்கடி சத்தம் கேட்பதாகச்சொல்லிக்கொண்டார்கள். பயூன் ராமசாமி மிகவும் துணிச்சல் பேர் வழி. அவர் இந்தக் குதிருக்குள் ஏறி உள்ளே யிருந்து கொண்டு இரவில் பேயாக அலறத்தொடங்கினார். இரண்டொரு நாட்கள் இவ்வாறு அட்ட காசம் செய்து வந்தது ராமசாமிப் பேய். கடைசியாக ஒரு நாள் இரவில் திடீரென்று சுவாமிகள் விழித்துக் கொண்டார். குதிர் அசைவதைப் பார்த்தார். அவருக்கு உண்மை விளங்கிவிட்டது” பெரிய விறகுக்கட்டை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு குதிர் அருகே வந்தார். “வா பேயே வெளியே” என்று கர்ஜித்தார். சுவாமிகளின் கர்ஜனையைக் கேட்டு நடுங்கிய பேய், வெல வெலத்துப் போய் வெளியே வந்தது. குதிருக்குள்ளிருந்து ஏறிக் குதித்த ராமசாமிப் பேயைக் கண்டதும் எல்லோரும் பயத்தோடு வாயைமூடிக்கொண்டு சிரித்தார்கள். அன்று பேய் சுவாமிகளிடம் நல்ல பூசை வாங்கியது.