பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


பட்டாபிஷேக நாடகம்

சிவகங்கையில் ஒருமாத காலம் நாடகம் நடந்தது. கடைசி பட்டாபிஷேக நாடகம் ‘பிரகலாதன்’ வைக்கப் பெற்றிருந்தது. நான் பிரகலாதனாக நடித்தேன். நல்ல கூட்டம். நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

நாடக சபைகளில் ஒரு வழக்கமுண்டு. கடைசி நாடகத்தன்று காட்சிகள் முடிய முடியப் பின்புறம் திரைகளை அவிழ்த்துக் கட்டி மறுநாள் பயணத்திற்கு ஆயத்தம் செய்துகொண்டே இருப்பார்கள். நாடகம் முடியுந் தருவாயில் முன்புறமுள்ள இரண்டொரு திரைகள்தாம் இருக்கும். அவற்றையும் மேலே பரண் மீதிருந்தபடியே சுருணையோடு சுருட்டிக் கட்டி வைத்து, மங்களம் பாடி முடிந்ததும், அப்படியே சுருணையோடு கீழே இறக்கி விடுவார்கள். இது சபையோருக்கு வேடிக்கையாக இருக்கும். மேலும் கீழுமாக சுருண்டு உயர்ந்து விழுந்து கொண்டிருந்த திரையை எதிர்பாராத விதமாகக் சுருணையோடு அப்படியே கீழிறக்குவதால், சபையோரின் கண்திருஷ்டி கழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

பட்டாபிஷேக நாடகத்தன்று அந்த நாளில் எல்லா ஊர்களிலும் நடிகர்களுக்குப் பரிசு வழங்கும் வழக்கம் உண்டு. இந்த நாளில் அது மறைந்து வருகிறது. அந்த நாளில் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் தாராள மனம் படைத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, விளம்பரப் பிரியர்களாக இல்லாமலும் இருந்தார்கள். யாருக்கு எங்கிருந்து பரிசு வரப் போகிறது என்பதே ஒருவருக்கும் தெரியாது. பரிசு கொடுப்பதற்காகவென்று எந்தப் பெரிய மனிதருக்கும் இலவசச் சீட்டுக் கொடுப்பதில்லை. நடிகர்களுக்கு நிறையப் பரிசுகளும் கிடைத்து வந்தன.

மறு பிறவி

நாடகம் முடிந்தது வழக்கம்போல் மங்களம் பாடுவதற்கு முன், பரிசு வழங்குவார்கள், ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பெயர்களைச் சொல்லிப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். பிரகலாதனுக்கு முடி சூட்டுவதோடு நாடகம் முடிவடைவதால்