பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள் காலையிலும் வழக்கம் போல் வந்து விட்டார். அந்தத் திரையோடு கூடிய மர உருளை என்மீது விழுந்திருந்தால் என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். தாரை தாரையாகக் கண்ணிர் விட்டார். அவர் அழுததைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. எப்படியோ ஒரு வகையாக அவரை வெளியே அனுப்பினார் தந்தையார்.

பரமக்குடிப் பயணம்

சிவகங்கையில் நாடகம் முடிந்ததும் பரமக்குடிக்குப் பயணமானோம். அப்போது சிவகங்கைக்கு இரயில் பாதை கிடையாது. மதுரையிலிருந்து பஸ் வழியாகத்தான் போனோம். சிவகங்கையிலிருந்து பஸ்ஸிலேறி மானாமதுரை போய் அங்கிருந்து இரயிலேறிப் பரமக்குடிக்குப் போக வேண்டும். நாங்கள் அனைவரும் பஸ்ஸிலேறிப் பயணத்திற்குச் சித்தமாக இருந்தோம். பஸ் புறப்படும் நேரத்தில் அந்த அற்புத நாடக இரசிகர் திடீரென்று வந்து விட்டார். “நானும் உங்களோடு மானுமதுரை வந்து, வழியனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்” என்று கூறிப் பஸ்ஸில் ஏறினார். என்ன செய்வது? பஸ் புறப்பட்டு விட்டது. வேறு வழியின்றித் தந்தையாரும் தலையசைத்தார்.

மானாமதுரை இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். பஸ்ஸிலிருந்து சாமான்களை இறக்குவதிலும், மீண்டும் அவற்றை இரயிலில் ஏற்றுவதிலும் இரசிகர் வஞ்சகமில்லாமல் உதவி புரிந்தார். இரயிலும் புறப்பட்டது. நான் தலையை வெளியே நீட்டி அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். கண்களில் நீர் ததும்ப அவர் ஏக்கத்தோடு நின்றார்.

பரமக்குடிக்கு வந்து சேர்ந்தோம். தந்தையார் முன்பே ஒரு முறை வந்து வீடு பார்த்து வைத்திருந்ததால் நாங்கள் எங்கள் தாயாருடன் தனிவீடு போய்ச் சேர்ந்தோம். அன்றிரவு பயணக் களைப்பு அதிகமாக இருந்தது. நிம்மதியாக உறங்கினோம்.

மறுநாள் காலை

மறுநாள் காலை ஏழுமணி அளவில் எழுந்து நான் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். தந்தையார் அம்மாவுடன் ஏதோ சண்டை