பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


படுத்தித் தாமே உடனழைத்துச் சென்று இரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பினார்.

நிலாச் சாப்பாடு

பரமக்குடியில் நாடகம் தொடங்கியது. நல்ல வசூல். சிவகங்கையிலும் பரமக்குடியிலும் வசூல் அதிகமாகும் செய்தியை அறிந்ததும் கம்பெனி உரிமையாளர்கள் எல்லோரும் அடிக்கடி வந்துபோனார்கள். சங்கரதாஸ் சுவாமிகள், பெளர்ணமியன்று நிலாச் சாப்பாடு சிறப்பாகப் போடவேண்டுமென்று திட்டம் போட்டார். அந்த ஏற்பாடு, உரிமையாளர்களில் இரண்டொருவருக்குப் பிடிக்கவில்லை. சுவாமிகளின் திட்டப்படி அதற்கு அதிகமாகச் செலவாகுமென்று தெரிந்தது. உரிமையாளர்கள் யோசித்தார்கள். சுவாமிகள், அவர்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமது திட்டப்படியே சிறப்பான முறையில் நிலாச்சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தார். நடிகர்களுக்கெல்லாம் ஒரே குதுரகலம், எல்லோரும் முழு நிலவு உலாவரும் நந்நாளில் விருந்துண்டு களித்தோம்.

உரிமையாளர்கள் திட்டம்

உரிமையாளர்கள் கூடிக்கூடிப் பேசினார்களாம். சுவாமிகளின் போக்கில் அவர்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதாம் தேவையான நாடகங்களேயெல்லாம் தயாரித்தவுடன் சுவாமிகளை விலக்கிவிடவும், சட்டாம்பிள்ளை திரு குற்றாலலிங்கம் பிள்ளையை வைத்துக் கொண்டே நாடகங்களைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டதாக எங்கள் தந்தையார் வந்து கூறினார். உழைப்புப் பங்காளியான திரு பழனியாப்பிள்ளை ஒருவர் மட்டும் இந்த ஏற்பாட்டுக்கு இசையவில்லையென்றும் சொன்னார்.

உரிமையாளர்களின் திட்டமெல்லாம் சுவாமிகளுக்குத் தெரிந்துவிட்டது. அதன் காரணமாகப் புதிதாக நாடகம் தயாரிப்பதும் நிறுத்தப்பட்டது. நிலைமையை அறிந்த உரிமையாளர்கள் சில நாட்கள் அமைதியாக இருந்து பார்த்துவிட்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை மட்டுமே இருந்து நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.