பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


கள் தமது ஆசிரியர் எதிரில் முத்திரையடி வைத்துப் பாடத் தயங்கினார் என்பதைப் பின்னால் உணர்ந்தோம்.

மதுரை மாரியப்ப சுவாமிகள் தமிழிசைக்குப் பெரும் பணி புரிந்தவர்களிலே தலைசிறந்த ஒருவர். தமிழிசை இயக்கம் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசைப் பெரும் புலவராக விளங்கியவர் நூற்றுக் கணக்கான சாகித்தியங்களை அவரே புனைந்திருக்கிறார். அத்தனையும் அருமையான பாடல்கள். சிட்டா ஸ்வரங்களுக்கெல்லாம் சாகித்தியங்கள் அமைத்துப் பாடியிருக்கிறார்.

நண்பர் கருப்பண்ணன்

புதியம்புத்துரரில் நாடகங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த ஊரில் கருப்பண்ணன் என்று ஒருவர் இருந்தார். அவர், ஒரு சலவைத் தொழிலாளி. ஊரில் பெரிய போக்கிரி அவர் கம்பெனிக்கும், சிறப்பாக எங்கள் தந்தையாருக்கும் நெருங்கிய நண்பரானார்.

திரு கருப்பண்ணனுக்குப் பதின்மூன்று மனைவியர் இருந்தார்கள். அவர்கள் பல்வேறு சாதியினார். ஒருநாள் நாங்கள் நாடகக் கொட்டகைக்குப் போகும்போது, அவர்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்கள் பலர் கூட்டமாக வாயிலில் நிற்பதைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டோம். உடனே அங்கு நின்று கொண்டிருந்த திரு கருப்பண்ணன், “இவர்களெல்லோரும் அடியேனுடைய வீட்டுக்காரிகள்: உங்களைப் பார்ப்பதற்காகத் தான் நிற்கிறார்கள்” என்றார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பதின் மூன்று மனைவியரை வைத்துக்கொண்டு, இவர் எப்படித்தான் வாழ்க்கை நடத்துகிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

பிள்ளையார் உடைப்பு

புதியம்புத்துரில் ஒரு குறிப்பிடத்தக்க விசேஷம் நடந்தது. தலைப்பைப் பார்த்ததும் திகைப்படைய வேண்டாம். பிள்ளையாரை உடைக்கும் இயக்கம் பிறக்காத காலம் அது. அந்தக் காலத்தில் ஒருவர் பிள்ளையாரை உடைத்தார் என்றால் அது வியப்புக்குரிய செய்தியல்லவா?