பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. சொல்லின் எவனோ?

கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு, அவர்சேரி வாழ்க்கையிலேயே ஆழ்ந்துவிட்டமை அறிந்து வருந்தினாள் ஒரு பெண், அவள் கணவன் அவளை மனப்பதற்குமுன் அறியாதவனோ, அவள்மீது விருப்பம் இல்லாமலே மணம் செய்து கொண்டவனோ அல்லன்; பலர் அறிய மணந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளை அறிவான்; அவளைக் கண்டு அவள் அழகிற்கு மயங்கி அவள்மீது காதல் கொண்டு. அக்காதல் நிறைவேற நெடுநாள் அரும்பாடு பட்டு அவள் அன்பைப் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்து பழகிய பின்னரே அவன் அவளை மணந்து கொண்டான்.

அன்று அவள் காதலுக்காக அவ்வாறு ஏங்கிக் கிடந்த அவனே, இன்று அவள் மனையில் கிடந்து மாளாத்துயரில் ஆழ்ந்து மடியுமாறு அவளை மறந்து பரத்தையர் சேரி சென்று வாழ்கிறான்.

கணவன் தகாவொழுக்கம் கண்டு அப்பெண் கடுந்துயர் உற்றாள்; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன; இரவு பகல் எப்போதும் அவன் நினைவேயாய்க் கிடந்து வருந்தினாள்: அவள் கண்கள் இடைவிடாது நீரைச் சொரிந்த வண்ணம் இருந்தன; அப்பெண்ணின் துயர் நிலையை அவள் தோழி பார்த்தாள்; அவள் நிலையை எண்ணி வருந்தினாள்.