பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. நொச்சியும் உழிஞையும்

மண்ணாசை கொண்டு, அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற்கொள்வதன் முன்னர், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம் மாற்றானுக்கு வாய்ப்புடைய இடம், ஆகியவற்றைப் பலமுறை ஆராய்ந்து, ஆராய்ந்து, தன் வலிமிக்க நிலையில், தனக்கு ஏற்புடைய காலத்தில், வாய்ப்புடைய இடமாக நோக்கிப் போர் தொடங்கியிருப்பன்.

ஆனால், அவன் பகைவனாகிய, மண்ணுக்குரிய மன்னவனோ எனில், அத்தகைய முன்னேற்பாடுகளோடு போர்க்களம் புகுந்தவனல்லன்; பகையரசன் படை தன் நாட்டுக்குள் புகுந்து, தன் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது என்பதை அறிந்தவுடனே, அப்படையை விரட்டித் தன் நாட்டை வாழ்விக்க வேண்டும் என்ற எண்ணமே முன் நிற்க, விரைந்து களம் புகுந்தவனாதலின் அந்நிலையில், தன் படைபலம் யாது? பகைப் படையின் பலம் யாது? தனக்கு ஏற்புடைய காலந்தானா? தனக்கு வெற்றியளிக்க வாய்ப்புடைய இடந்தானா என்பனவற்றினை எண்ணிப் பார்த்து அவையெல்லாம் தனக்கு நல்லவாதல் கண்ட பிறகே களம் புகுந்திருத்தல் இயலாது.