பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

117


உள்ளது ஒரு சில படையே எனினும், அது கொண்டே களம் புகுந்திருப்பன்; தனக்குத் துணை புரிவாரைக் கண்டு. அவர் துணையினை நாடிப் பெறுதல் வேண்டும் என்ற நினைவு தானும் அவனுக்கு எழுந்திராது. ஆக இந்நிலைகளால், வந்தவன் கை வலுக்க, இவன் கை வலுவிழக்க, வந்தானை வெல்ல மாட்டாது தோற்றுப் போவது, மண்ணுக்கு உரியானுக்கு ஒரோ வழி உண்டாதலும் கூடும்.

தோல்வியுற்றது தன் படை என்பதினாலேயே, மண்ணுக்குரிய மன்னவன், பகைவனுக்குப் பணிந்து போக வேண்டும் என்பது தேவையில்லை. சிறிது காலம் கழியின் வந்தவனை வென்று ஓட்டுவது இயலும். அதற்குள், அவனுக்கு ஏற்புடைய காலமும் வந்து வாய்க்கும். அவனோடு நட்புடையராகிய அரசர் சிலர், அவனுக்குத் துணையாகத் தம் படைகளை அளிப்பதும் செய்வர். ஆகவே, அக்காலத்தை எதிர்நோக்கியிருப்பது அரசமுறையாகும். ஆகவே அக்காலம் வரும் வரை பகைவனுக்குப் பணியாமலும், அவனால் பற்றப்பட்டுப் பாழுற்றுப் போகாமலும், தன்னையும், தன் படையையும் காத்துக் கொள்ள வேண்டுவது அவன் தலையாய கடமையாகும்.

அக்கடமையைக் குறைவற நிறைவேற்றும் கருத்துடையராகவே நம் கன்னித் தமிழ் நாட்டுக் காவலர்கள், தங்கள் தலைநகர்களைத் தலைசிறந்த அரண்களாக அமைத்து இருந்தார்கள். பேரூர்கள் ஒவ்வொன்றும் பெரிய பெரிய கோட்டைகளாகவே அமைய வேண்டுவது, அக்காலத் தமிழகத்தின், இன்றியமையாத் தேவையாக அமைந்து விட்டது.

பண்டைத் தமிழகம் ஒரு நாடு செல்வத்தில் சிறந்து வாழ வேண்டுமாயின், அது நீர்வள, நில வளங்கள் தரும் வற்றாப் பெருவளங்களோடு, வாணிகத் துறையின் வளம்