பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

என் தமிழ்ப்பணி



அறிவின் அந்த இயல்பு, அதற்கு இயல்பாகவே வந்து வாய்ந்துவிடாது. அது அந்த அறிவினைத் தாங்கி நிற்கும் மனிதன் சார்ந்து நிற்கும் சூழ்நிலையினாலேயே உருவாகும்.

மனித இனம், தனித்தனியாக இருந்து வாழ இயலாது. மனித இனத்தின் தேவைகளும், அது வாழும் உலகச் சூழ்நிலையும் கலந்துறை, வாழ்விற்கே வழிகோலியுள்ளன. அவ்வாறு கலந்து வாழும் மனிதர்கள் எல்லோரும் ஒத்த இயல்புடையவராகிவிடார். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றாலும், அவரவர் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் அவரவர்பால் அமைந்து கிடக்கும் சிறப்புகள் வேறுபடுவதற்கு ஏற்ப, அவரவர் குணநலனும் வேறு பட்டே தீரும். ஆகவே, இவ்வியல்பால் நல்லவர்களையும், தீயவர்களையும் ஒருசேரக்கொண்டிருக்கும் உலகம்.

நல்லனவும், தீயனவும் தேர்ந்து உணர்வதே அறிவுக்கு இலக்கணமாம் என்றாலும், அவ்விலக்கணம் அதற்கு இயல்பாகவே உண்டாகிவிடாது. அது, அவ்வுணர்வைத் தன்னளவிலேயே பெற்றிருப்பதில்லை. அது, மக்கள் இனத்தோடு கலந்து பழகும் நிலையிலேயே அவ்வுணர்வைப் பெறுகிறது. அறிவு சார்ந்த தன் வண்ணம் ஆகிவிடும் இயல்புடையது. மனித இனம், தன்னைச் சார்ந்து நிற்பார் அறிவைத் தன்வயம், ஆக்கும் பேராற்றல் வாய்ந்தது. ஓரினத்தோடு-அது நல்லவர் இனமாயினும் சரி, தீயோர் இனமாயினும் சரி-அதனுடன் கலந்துவிட்ட பின்னர், கலந்துவிட்டவரின் அறிவு, அவ்வினத்தாரின் அறிவின் இயல்பினை ஏற்றுக் கொள்ளாது, தன் பண்டைய தனித் தன்மையை நிலைநாட்டி நிற்க இயலாது. கலந்தது நல்லோர் அவை ஆயின், அவ்வறிவு நல்லறிவாம். கலந்தது தீயோர் கூட்டமாயின் அவ்வறிவும் தீதாம்.

பெய்யும் மழை நீர்க்கு, அது மண்ணை அடையும் வரை சுவையும் கிடையாது, நிறமும் கிடையாது. அது மண்ணைத்-