பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

என் பார்வையில் கலைஞர்



என்னைப் பார்த்ததும் நின்றார். உடனே நான் 'அண்ணாச்சி, பரிதி இளம் வழுதிய அடித்த விவகாரத்த, நான் வானொலியில் செய்தியாகப் போடப் போறேன். இப்ப எல்லாம் கலைஞருக்கு ஆதரவான செய்திகளத்தான் போடறேன். வேணுமுன்னு போடல. அதுதான் நியாயம். ஆனாலும், உங்க கலைஞர் என்னை எப்படித் தொலைக்காட்சியில இருந்து தூக்கி அடிச்சிட்டார் பார்த்தீங்களா? என்ன மட்டும் டிவியில் அவர் நிலைக்க விட்டிருந்தால், இந்நேரம் எப்படி எல்லாம் செய்தி வெளியாகியிருக்கும். கலைஞருக்கு, வேண்டியவன் யார், வேண்டாதவன் யாருன்னு தெரியலையே?' என்று சரமாரியாகப் பொரிந்தேன்.

உடனே சண்முகநாதன் அமைதியாக ‘அவர் உங்கள் மாத்தல சார்’ என்றார். நான் 'நல்லா இருக்கே நியாயம்' என்றேன். சண்முகநாதன், தம் சொல்லை நம்பாத என்னை உணர்வு கொப்பளிக்கப் பார்த்தபடியே ‘என் பிள்ளைகள் சத்தியமாச் சொல்கிறேன். உங்க மாறுதலுக்கு கலைஞர் காரணமல்ல, அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்’ என்றார். உடனே, நான் அவரது பதிலை அங்கேயே ஏற்றுக் கொள்வதாக, நெகிழ்ந்து பேசினேன்.

செய்திப் பணி முடிந்து ஆற அமர யோசித்த போது, சென்னை தொலைக் காட்சியில் இருந்து, வானொலி நிலையத்திற்கு கலைஞர் மாற்றியிருக்க மாட்டார் என்றே தோன்றியது. அதே சமயம், வைகோவின் நிர்ப்பந்தம் கருதி, பேசாமல் இருந்து இருப்பார் என்று அனுமானிக்க முடிந்தது. எங்கள் அமைச்சருக்குக் கலைஞர் மட்டும் புகார் செய்திருந்தால், என்னை சென்னைக்கு உள்ளேயே மாற்றி இருக்க மாட்டார்கள் என்ற தெளிவும் பிறந்தது. இப்படிப் பட்டவர்களுக்கு என்றே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீநகர், அப்போதைய சண்டிகட், நாகலாந்து தலைநகர் கோகிமா, அந்தமான் போன்ற இடங்கள் என் நினைவுக்கு வந்தன. இதனால், கலைஞர் மீது ஒரு பாசப்பிணைப்பு ஏற்பட்டது.

சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிறிது அடாவடியாகவும், ஆணவமாகவும் பேசத்தான் செய்வார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், கலைஞர் முதல்வராக இருக்கும் போது, அவர்களை ஒரு பார்வை பார்ப்பார். அத்தனை பேரும் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்கள். ஜெயலலிதாவும் தமது கட்சிக்காரர்களை அடக்கும் வல்லமை மிக்கவர்தான். ஆனால், கண்டுக்க மாட்டார்.