பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

159


ஏகலைவன்
கலைஞர்
அர்ச்சுனன்



1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

வள்ளலார் வளாகத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று நான் முன்பு முதல்வர் கலைஞரிடம் கொடுத்த குறிப்பு சரியாக செயல்படுத்த படவில்லை என்று கருதினேன். அரசு இதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக வள்ளலார் மக்கள் நேயப் பேரவை என்ற அமைப்பை துவக்கினோம். வள்ளலாரை சைவச் சிறையில் இருந்து மீட்டி, அவரை தமிழ் வழிபாட்டாளராக, சாதிய மறுப்பாளராக, தமிழ்ச்சித்தராக மக்களிடையே, மக்கள் மொழியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் பேரவையின் நோக்கம்.

தோழர் செந்தில்நாதன் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தூண்டியவர். இந்த அமைப்பிற்கு நான் தலைவராகவும், மணிவாசகர் நூலக உரிமையாளர் பேராசிரியர் சா. மெய்யப்பன், முனைவர் இளவரசு துணைத் தலைவர்களாகவும், சென்னை கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் பொருளாளராகவும் நியமிக்கப் பட்டோம். புலவர் கீதா பச்சையப்பன், முகம். மாமணி ஆகியோர் இதன் செயலாளர்கள். எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், தீக்கதிர் பொறுப்பாசியர் சு. பொ. அகத்தியலிங்கம், இளங்கவிஞர் இரா.தெ.முத்து ஆகியோர் இந்த அமைப்பில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இந்த அமைப்பு உருவாகியிருப்பதும் இதன் நோக்கம் பற்றியும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியான போது நாடெங்கிலும் இருந்த பல்வேறு வள்ளலார் அமைப்புகள் எங்களுடன் தொடர்பு கொண்டன. இது நாங்கள் எதிர்பாராதது.