பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

29



சென்ற தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்று தெரியாதபோதே, எனது அருமை தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரும், வழக்கறிஞரும், கலைஞர் மீது பற்றாளருமான ச.செந்தில்நாதனுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர். என். நல்லகண்ணு அவர்களோடும் ஆலோசித்து கலைஞர் வென்றாலும் தோற்றாலும் அவர்தான் இந்த நூல்களை வெளியிட வேண்டும் என்று கூட்டாக முடிவெடுத்ததைச் சுட்டிக் காட்டினேன். கலைஞர் லேசாய் சிரித்தார். எனக்கு புரிந்து விட்டது இப்படிப்பட்ட முடிவு, அவருக்கு காட்டும் சலுகை அல்ல. பிச்சையில் அதிகாரப் பிச்சை கூடாது. புரிந்து கொண்டு என் தலையில் நானே லேசாக அடித்துக் கொண்டேன்.

என்றாலும், கலைஞர் இந்த அதிகாரப் பிச்சை பற்றி அலட்டிக்கவில்லை. சண்முகநாதன் அவர்களோடு டெலிகாமில் பேசினார். ‘நம்ம சமுத்திரத்துக்கு அவரோட நூல்களை வெளியிட ஒரு தேதி வேணுமாம் வா’ என்றார். நான் நெகிழ்ந்து போனேன். நான் கடந்தகாலத்தில் வெளிப்படுத்திய கலைஞருக்கு எதிரான கண்டன அறிக்கைகளையும் மீறி அவர் ‘நம்ம சமுத்திரம்’ என்கிறார். இந்தப் பெரிய மனம் - கலைஞரின் சிறியன சிந்தியாத இயல்பு என்னை அப்படியே ஆக்கிரமித்துக் கொள்கிறது. சண்முகநாதன் வரும்போது, பார்வை மங்குகிறது. சண்முகநாதன் டைரியை காட்டி ஏதோ சொல்கிறார். உடனே கலைஞர் என்னைப் பார்த்து வெளியீட்டு விழாவை அந்த மாதம் 26ஆம் தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்கிறார். சண்முகநாதனும் குறித்துக் கொண்டார்.

எனது மூன்று படைப்புகளையும் கலைஞரிடம் கொடுக்கிறேன். ஒவ்வொரு படைப்பிலும் தம்பிரான் தோழர் கலைஞருக்கு என்று நான் எழுதியிருப்பதை கலைஞர் சிறிது அழுத்தமாக பார்க்கிறார். இந்த மாதிரி எவரும் தமது படைப்புகளில் இப்படி எழுதி கொடுத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த வார்த்தையில் கலைஞருக்கும் எனக்கும் உள்ள உறவும் அந்த உறவில் ஏற்பட்ட ரசாயன மாற்றமும் உள்ளடங்கி இருப்பதைச் சொல்லாமல் சொல்லும் புராணப் பொருள் மிக்க வார்த்தை அது. இதை பின்னால் விளக்கலாம் என்று நினைக்கிறேன்.