பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

43


பெரும்பாலும் பனையேறி நாடார்களை கொண்ட எங்கள் கிராமத்தில் நாங்கள்தான் பெரும்பான்மையினர். ஆனாலும், மிகச் சிறுபான்மையினரான ஆசாரிகளும், வெள்ளாளர்களும் எங்கள் ஆட்களை ஒருமையில்தான் பேசுவார்கள். அறுபது வயது நிரம்பிய எனது தாத்தாவை ஒரு ஏழு வயது ஆசாரி சிறுவன் ‘உதிரமாடா! எங்க வீட்டுக்கு வருவீராம்’ என்று சொல்லிவிட்டுப் போவான். எங்கள் தாத்தாவும் ‘அப்படியா ஆசாரி அய்யா’ என்பார். ஒற்றை கணக்கப்பிள்ளை வீட்டிற்கு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு போவார்.

பொதுவாக பிராமணர்களைத்தான் சூத்திரர்கள் இப்படி அழைப்பது உண்டு. ஆனால், சூத்திரர்களான எங்கள் ஆட்கள் இன்னொரு சூத்திரர்களை பிராமணர்களை போல் நடத்த வேண்டிய நிலைமை. இதனை பிற்காலத்தில் என்னைப் போன்ற இளைஞர்கள் தலையெடுத்து நீக்கி விட்டோம் என்றாலும் அப்போது மனோ அடிமையில் கிடந்த எங்கள் சாதியில் ஒருவர் முதலமைச்சர் ஆனதே ஒரு பெரிய சாதனை. ஒரு பனையேறி வீரர் ‘காமராசர் காமராசர் என்கிறார்களே அவரு நம்ம ரிவன்யூ இன்சுபெக்டர் அய்யாவவிட பெரியவரா’ என்று ஒரு பெரிய கேள்வியாகக் கேட்டார். இப்படி எங்களைப் போன்ற எளியவர்களை உய்விக்க வந்த காமராசரை படிக்காதவர் என்றும், பாமரர் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேடைகளில் திட்டித் தீர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காமராசரின் எதிரிகள் சிறுவனான எனக்கும் எதிரிகளே. இந்த எதிரிப் பட்டியலில் முன்னணியில் இருந்த கலைஞரும் என் எதிரியே.

என்றாலும், காமராசர் சாதியை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு’ என்பதே தாரக மந்திரம். தமிழ்த்தாயை, இந்தி அரக்கி கொலை செய்ய போவதாக ஒரு எதிர்பார்ப்பு. இதனால், வடநாட்டு மக்களுக்கும், இந்தி மொழிக்கும் எதிராக அனைத்து மாணவர்களும் திமுக கொடியின் கீழ் ஒன்று திரண்டிருந்த நேரம். படிக்காத மனிதர்கள் கூட மேடையில் திமுகவினர் காமராசரை படிக்காதவர் என்று சொல்லும் போது இவர்கள் என்னமோ லண்டனில் படித்து விட்டு பாரிசில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் கைதட்டுவார்கள். இத்தகைய அரசியல் சூழலில் நான் காமராசரை பார்க்காமலே அவர் பக்தனானேன்.