பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

என் பார்வையில் கலைஞர்


பார்த்திருந்தால் அவரை நோக்கி. ஒரு கல்லைக்கூட வீசியிருப்பேன். ஆனாலும் காமராசர் வெற்றி பெற்று விட்டார் காமராசர் எதிரி என் எதிரி என்று நினைத்த நான் இப்போதோ என் எதிரியான கலைஞர் காமராசரின் எதிரி என்று நினைக்கத் துவங்கினேன்.

காமராசர் வெற்றி பெற்ற செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் அரசு விடுப்பில் சென்னை வந்தேன். என் இனிய நண்பர் க.பா. பழனியை சந்தித்தேன். மாணவர் காங்கிரஸ் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இனிய நண்பர். வெளிப்படையாக பேசுகிறவர். கன்னியாகுமரி தேர்தலில் முகாமிட்டவர். அவரை பார்த்ததும் காமராசரை முறியடிக்க நினைத்த கருணாநிதி என்பவரை கண்டபடி திட்டினேன். ‘அந்தாளு எந்த மாதிரி’ என்று கேட்டேன். உடனே பழனி ‘பிரிலியன்ட் பெல்லோ பிரைனி சாப், திமுகவின் பேக்போன்’ என்று மணிப் பிரளவ ஆங்கிலத்தில் அசத்தினார். நான் அவரை அச்சுறுத்துவது போல் பார்த்தபோது ஒரு நிகழ்ச்சியை விளக்கினார்.

தஞ்சையில் திமுக அரசுக்கு எதிராக இந்த பழனி ஒரு போராட்டம் நடத்தினாராம். அங்கே சுற்றுப் பயணமாய் சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியதோடு. ‘பானை இங்கே படியரிசி’ எங்கே’ என்று திமுகவினர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நினைவு படுத்தினாராம். காவல்துறையினரும் காங்கிரஸ்காரர்கள் பரம சாதுக்கள் என்பதால் கலைஞரின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வில்லையாம். ஆனால், அமைச்சர் கருணாநிதியோ கறுப்புக் கொடி காட்டிய தொண்டர்களின் தலைவரான பழனியை நெருங்கி ‘காங்கிரஸ் போராட்ட தலைமை உங்களிடம் வந்ததற்காக உங்களை வாழ்த்துகிறேன் பழனி’ என்று சொல்லி விட்டு போனாராம்.

அகாலமாக மரணமடைந்த தஞ்சை மனிதரான என் தோழர் பழனி அரசியலை ஒரு சடுகுடு ஆட்டமாகவே எடுத்துக் கொண்டார். கலைஞரின் புகழையே அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். பொதுவாழ்க்கையில் தனிமனித வெறுப்போ, துதி பாடலோ கூடாது என்பார். அவரால் பெருந்தலைவர் காமராசரையும் நேசிக்க முடிந்தது. அதே சமயம் பெருந்தலைவரை கடுமையாக விமர்சித்த கலைஞரோடும் அன்பு பாராட்ட முடிந்தது.