பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

என் பார்வையில் கலைஞர்



இலங்கைத் தமிழ் பெண்களிடம், இந்திய ராணுவம் அத்து மீறி நடந்து கொண்டது என்பது கலைஞரின் வாதம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோண மலை என்று பல்வேறு இடங்களுக்குப் பயணித்த எனக்கும், இந்தத் தகவல்கள் கிடைத்ததும், அப்போது சென்னையில் சுவாகத் ஹோட்டலில் தங்கியிருந்த மூப்பனார் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் உடனடியாய் ராஜீவ் காந்தியைச் சந்தித்துத் தக்க பரிகார நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து, இந்தியப் பெண் போலீஸ் அங்கே அனுப்பப்பட்டது.

இந்திய அமைதிப் படையினர் இலங்கைத் தமிழர்களுக்காக நல்லதும் செய்திருக்கிறார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு, ஆயுதங் கடத்திய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப் போராளிகளை, பலாலி விமான நிலையத்தில் இருந்து, ஒரு இலங்கை விமானம் மூலம் கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு அந்த நாட்டு அரசு தீர்மானித்து விட்டது. விமானமும் வந்து விட்டது. அந்த விமானத்தைத் தடுப்பதற்காக, இந்தியப் படை சுற்றி வளைத்ததும் எனக்குத் தெரியும். ஆனால், மத்திய அரசின் முட்டாள் தனமான அரசியல் முடிவால், இந்தப் போராளிகள் சயனைடு அருந்தித் தற்கொலை செய்து கொண்டார்கள்.

கலைஞருக்குச் சாதகமான வி.பி.சிங் அரசு, நாடாளுமன்றத்தில் பதவி இழந்தது. கலைஞருடன் பகைமை பாராட்டி, அதிமுகவுடன் உறவாடிய ராஜீவ் காந்தியின் தயவில், சந்திரசேகர் அமைச்சரவை மத்தியில் பதவியேற்றது.

அந்தக் கால கட்டத்தில் கலைஞரின் செய்தியாளர் கூட்டம், என்ன காரணத்தாலோ கட்சி அலுவலகமான அறிவாலயத்திலேயே நடைபெற்றது. நான் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தேன். அந்த அறைக்குள் நுழைந்த கலைஞர் 'என்ன சமுத்திரம்! எப்படி இருக்கீங்க?’ என்று என்னை மட்டும் தனிப்படுத்தி நலம் விசாரித்தார். நானும் ஒரு மகத்தான தலைவர் இப்படி நலம் விசாரிக்கும் போது, அவருக்கு எதிராக ஒரு சின்ன கேள்வியைக் கூட எழுப்பக் கூடாது என்று உறுதி பூண்டேன். ஆனால் ஒரு செய்தியாளர் இந்திய அமைதிப் படை பற்றி ஒரு கேள்வி எழுப்பி, கலைஞர் பதிலளித்த போது, என்னால் சும்மா இருக்க முடியவில்லை.