பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

முடியரசன்


கொண்டும், கட்டுக் கதைகளைக் கொண்டும், பெயர்களைக் கொண்டும் அயலவர் விழாவென்று மயங்கிவிட்டோம். விழாவின் நிகழ்ச்சிகளை நோக்கும் அளவிலேயே உண்மை புலனாகும். எனினும் இதன் உண்மைப் பெயரையும் அறிந்துகொள்வது சாலப் பயன்தரும். இதனையறிந்துகொள்ளச் செட்டிநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லுதல் வேண்டும். இப் பகுதி மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச் சிறப்பாகக் கொண்டாடிவந்தனர். எப்படியோ இப்பொழுது அருகிவிட்டது. இவ் விழாவினை ‘மாநோம்பு’ என்றும் ‘மகர் நோம்பு’ என்றும் அப்பகுதியில் இன்றும் கூறுவதைக் கேட்கலாம். அச் சொல்லின் உண்மையுருவம் வேறு. அவ்வுருவம் பேச்சு வழக்கிற் சிதைந்து திரிந்து உருமாறியிருக்கிறது. மகார் நோன்பு என்பதே அதன் முழு உருவம். மகார் என்னுஞ் சொல் சிறுவர் எனப் பொருள்படும். நோன்பு எனுஞ்சொல் விழா, திருநாள் எனும் பொருளில் வரும். மகார் நோன்பு என்னும் பெயர். சிறுவர் விழா - குழந்தைகள் விழா என்னும் பொருளைச் சுட்டி நிற்கிறது.

இவ்வாறு குழந்தைகளுக்குக் கொலுவும் கோலாட்டமும் காட்டி விளையாட்டுணர்வூட்டி அவ் வழியே கல்வியைத் தொடங்கிப் படைப் பயிற்சியும் அளித்து வளர்த்துவந்தனர். நம் மக்கள் தாம் கற்பனை வளம் மிக்கவர் அல்லவா? கல்விக்குக் கலைமகள் என்றும் வீரத்துக்குக் கொற்றவையென்றும் கற்பனை யுருவம் கொடுத்தனர். காலப் போக்கில் அவை சமயச் சார்புடையனவாகி, சரசுவதிபூசை, ஆயுதபூசை எனப் பெயர் பெற்றன. கல்வியையும் படைக்கலத்தையும் என்று பூசனைப் பொருளாக்கினரோ அன்றே கல்வியிலும் வீரத்திலும் பின் தங்கிவிட்டனர் தமிழர். தெய்வங்களின் பெயரால் கள்ளக் கணக்குச் சுவடிகளையும் வஞ்சனைத் துலாக்கோலையும் வழிபடத் தொடங்கிப் பொய்யராக - போலியராக மாறிவிட்டனர். மகார் நோன்பு என்னும் பெயரை மறந்ததால் மாற்றியதால் நேர்ந்த விளைவுகளை எண்ணிப் பாருங்கள்.

புரட்டாசித் திருநாள் தமிழர்க்கே உரிய திருநாள் என்ற உண்மையையும் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப் பெற்ற திருநாள் என்ற உண்மையையும் உலகுக்குணர்த்த மகார் நோன்பு என்ற இப் பெயர் ஒன்றே சாலும்.

இப் பெயரும் நிகழ்ச்சியும் மற்றப் பகுதிகளில் வழக்கொழிந்தமை போலச் செட்டிநாட்டுப் பகுதியிலும் வழக்கொழிந்திருப்பின், இவ் விழாவையும் இதன் உண்மைகளையும் இழந்திருப்போம். ஆதலின், இன்னோரன்ன பழந்தமிழ்ச் சொற்களை வழக்கொழிய விடாது காத்தலும் அவற்றுட் பொதிந்துள்ள உண்மைகளை ஆய்தலும் தமிழ் மக்களுக்குத் தலையாய கடமையாகும். இக் கடமை காத்து ஒழுகுவோமாயின் நாம் இழந்த பல உரிமைகளை - செல்வங்களை-நாகரிகங்களை மீண்டும் பெற்றுத் திகழலாம் என்பது ஒருதலை.

(தினமணிக்கதிர் இதழ்)