பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

முடியரசன்


இது. கல்லாக் கவிஞர், இலக்கணம் வேண்டாவெனும் பொல்லாக் கொள்கை யுடையராகவே இருத்தல் இயல்பு. கல்லார் சொல்லை நல்லோர் ஏலார். என்றுமே வாழ விழையுங் கவிஞர் இலக்கணத்தைப் புறக்கணியார்.

எழுத்து வழு, சொல் வழு, பொருள் வழு, யாப்பு வழு முதலிய அனைத்து வழுக்களும் பொருந்திய பாக்களைப் புனைவதால் தமிழ்மொழிக்கு யாது பயன்? ஓரிலக்கணமும் அறியாதார் பாட்டுகள் எழுதுவதும் இலக்கணமே வேண்டா வெனக் காட்டுக் கூச்சலிடுவதும் முறையன்று; நெறியும் அன்று.

கவிஞன் இலக்கணத்துக்குக் கட்டுப்பட்டவன் அல்லன் என்று கதைப்பர் சிலர். இலக்கணத்துக்கு அவன் அடிமையாகாமல் அதனைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்பவனே இயற்கைக் கவிஞன். உண்மைக் கவிஞன். மற்றையோன் செயற்கைக் கவிஞன்-போலிக் கவிஞன். அவ்வியற்கைக் கவிஞன், உணர்ச்சியால் உந்தப்பட்டுப் பாடும்பொழுது பாடல்களில் இலக்கணம் கட்டியங் கூறி நிற்கும்.

கவிதையிற் சொல்லழகு

இந் நூற்றாண்டில் தோன்றியுள்ள கவிதைகள், பெரும்பாலும் அனைவரும் எளிதிற் பொருளுணரத்தக்க சொற்களால் அமைந்தனவேயாகும். இதற்குப் பாரதிதான் முன்னோடியாக விளங்குகின்றார். சங்க இலக்கிய நடையிலிருந்து சிறிது சிறிதாக இறங்கி எளிமையின் இறுதிக் கட்டத்துக்கே வந்துவிட்டது இன்றுள்ள கவிதை நடை.

மக்கள் அடிமையில் மூழ்கித் தாய்மொழியை மறந்து, செயலற்றுக் கிடந்த காலம் பாரதியார் காலம். ஆதலின், அவர்களுக்கு ஆவேச வெறியூட்ட, உள்ளத்தில் விடுதலைக் கனலை மூட்டக் கவிதைகளைக் கருவியாக்கிக் கொண்டார் அவர். அதனால் கற்றாரும் மற்றாரும் புரிந்துகொள்ளக்கூடிய, அவர்கள் வாய் தானே பாடக் கூடிய எளிய நடையமைத்து இசையமையப் பாடினார். பாரதிதாசனும் பிறரும் அவரை அடியொற்றிப் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டொழுகினர்.

பாரதியார் எளிய நடையையே வேண்டுபவராயினும் கவிதைக்குத் தனிநடை கொண்டவராகவே விளங்கினார். அவர்தம் உரைநடையிற் காணப்பெறும் எளிமையின் மிகுதியையும் பிறமொழிக் கலப்பையும் செய்யுள் நடையிற் காணவியலாது. பாரதியார் நடைக்கும் பாரதிதாசன் நடைக்கும் வேறுபாடுண்டு. எளிமையே வேண்டுமென்போர் இதனை நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

கவிதை நடை எளிமையின் எல்லைக்கே வந்து விட்டது. இதற்கு மேல் இனிச் செல்லவியலாது. இறங்கிய நடை, இனி நாளுக்கு நாள் படிப்படியாக ஏறியாதல் வேண்டும். பாரதி மூட்டிவிட்ட மொழியார்வத்தீ எங்கும் பற்றிப் பரந்து ஒளிவிட்டிலங்குங் காலம் இக்காலம். ஆதலின், அடிமைக் காலத்து வேண்டப்பட்ட