பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

முடியரசன்


வினாக்கள் எழு முன்பே அனைத்தும் விளங்கக் கூறித் தாயின் வாயை அடைத்துவிடுதல் வேண்டும்.

அந்தப் புனல் பொதுவான புனலன்று; கண்டாரால் விரும்பப்படும் புனல், அதனால் நாங்களும் விரும்பினோம், புனலாடினோம் என்ற குறிப்பைக் ‘காமர் புனல்’ என்று சுட்டுகிறாள். அப் புனல் விரைவாகச் செல்கிறது, அதனால் அவளை இழுத்துவிட்டது. விரைந்து ஓடும் அப் புனலில் பெண்களாகிய எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை - என்ற கருத்தைக் ‘கடும்புனல்’ என்று குறிக்கின்றாள். அவளைத் தனியே நாங்கள் விடுவோமா? நாங்களும் உடன் சென்றோம் என்பதைக் ‘கலந்தெம்மோடு ஆடுவாள்’ என்று சொல்லாமற் சொல்லி விடுகின்றாள். இவ்வளவும் கேட்ட தாய் வாயைத் திறப்பாளோ? தோழி சொன்னபடியே தாய் ஆடினாள். இப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றன “காமர் கடும் புனல் கலந்தெம்மோடாடுவாள்” என்ற வரியில் அமைந்த சொற்கள். ‘ஆடுவாள்’ என்ற சொல், நீரில் ஆட்டம் போட்டாள். அதனால் வெள்ளம் இழுத்துச் சென்றது என்ற குறிப்பையும் உணர்த்தி நிற்கிறது.

இரட்டுற மொழிதல்

இனி இரட்டுற மொழியும் அழகையும் சிறிது காண்போம்:

“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியாரே”

இது தனிப்பாடல். புலவர் நம்மைப் பலசரக்குக் கடைக்கே இழுத்துச் சென்று விடுகின்றார். வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் - இத்தனை சரக்குகளையும் இந்தப் பாடலிலே - புலவர் படைத்த கடையிலே காண்கிறோம். இந்தக் கடைச் சரக்குச் சொற்களெல்லாம் மேலெழுந்த வாரியாக இன்பந் தந்து, தம்முள் பதுக்கி வைத்திருக்கும் வேறு பொருள்களையும் வெளிப்படுத்தி நின்று அழகு செய்கின்றன. திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செட்டியாரே! விரும்பத்தக்க இந்தக் காயம் (உடம்பு) சுக்குப் போலக் காய்ந்துவிட்டால் (இரத்தம் சுண்டிவிட்டால்) வெந்த அயத்தால் (அயபஸ்பம் என்ற மருந்தால்) ஆவதென்ன? அதனால் இந்தச் சரக்கை யார் சுமப்பார்கள்? நீர் எனக்குச் சிறந்த அகத்தை (இன்ப வீட்டை)த் தந்தால் இந்தப் பெரிய காயத்தை (உடம்பை)த் தேட மாட்டேன் என்று இவ்வகையில் பொருளுணர்த்தி இன்பந் தருகின்றன இந்தப் பலசரக்குச் சொற்கள்.

இவ்வாறு முன் கூறிய முறைப்படி, பலவகையான சொல்லழகுகள் அமைந்து, இன்பந் தருகின்ற கவிதைகள் நம் தமிழிலக்கியங்களிலே மிக்குக் கிடந்து, மலர்ந்து, மணம் வீசுவதை அவ்விலக்கியப் பூங்காவுள் புகப்பெற்றார் உணரலாகும்.

(15-11-1957இல் திருச்சி வானொலியில் ‘கவிதை இன்பம்’ என்ற பேச்சுத் தொடரில்)