பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

முடியரசன்


அனைத்தும் எதிர்ப்பு, இவ்வாறு துறைதோறும் துறைதோறும் எழுந்து வந்த எதிர்ப்புகளே பாவேந்தரைப் போர் மறவனாக மாற்றின. தமிழ், துறைதோறும் அழுத்தப்படுவதும், அது தலைதூக்கினால் எதிர்க்கப்படுவதும், பழிக்கப்படுவதுங் கண்ட பாரதிதாசன் களத்தில் நிற்கும் காளையாக மாறினார்.

“நாயினுங் கீழாய்ச்செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டே
ஓயுதல் இன்றி அவர்நலம் எண்ணி

உழைத்திட நான் தவறேன்’

என்னும் பாடலை உன்னிப்பாக நோக்குதல் வேண்டும். தமிழ் நாட்டார் நலிவதைக் ‘காணுங்கள்’ என்று காட்டவில்லை. ‘நான் கண்டேன்’ என்று நவில்கிறார். ‘உழைத்திட வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கவில்லை. உழைத்திட ‘நான் தவறேன்’ எனத் தாமே பொறுப்பேற்கிறார். இவ்வாறு பாரதிதாசன் வாழ்க்கை வேறு, இலக்கியப் பணி வேறு என்று பிரித்துக் காண இயலாத அளவு, இரண்டும் ஒன்றாக ஒன்றிப்போனவர்.

தொண்டுக்கு இலக்கணம்

தமிழ்க் குமுகாயத்தின் விடுதலைக்குப் பாடுபடும் எவரும் புரட்சித் தொண்டுதான் செய்தாதல் வேண்டும். அத் தொண்டு எத்தன்மையில் அமைதல் வேண்டும் என்று இலக்கணமே வகுத்துத் தருகிறார் பாவேந்தர்.

“தமக்கொரு தீமை என்று நற்றமிழர்
எனை அழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித்தரக்கடவேன்நான்
இனிதாம் என் ஆவி”

“ஆன என் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்

குவப்புடன் நான் சேர்ப்பேன்”

உண்மைத் தொண்டு புரிவோர், இனிதாகிய ஆவியும் தரக் கடமைப்படுதல் வேண்டும், அல்லல்கள் வரின் ஏற்றல் வேண்டும், ஊனுடல் கேட்பினும் உவப்புடன் சேர்த்தல் வேண்டும் என்பது பாவேந்தரின் கொள்கை. தொண்டு புரிவதால் தொண்டர் வாழ்க்கையில் துயர் சூழ்கிறது; தாங்க முடியாத அளவு சோதனைகள் நிகழ்கின்றன. அவ்வமையம் மாற்றார் பணம், பதவி, பட்டம் முதலியன காட்டி ஆர்வ மொழிகள் கூறி, அழைப்பு விடுக்கின்றனர். உடனே ஓடிவிடுவது தொண்டுக்கழகா? என வினவின்,

“எமை நத்துவாயென்று எதிரிகள் கோடி

இட்டழைத்தாலும் தொடேன்”