இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாடிய மலர்
1
சோலையில் பூத்தாய் ! கண்டு
சொக்கினார் வளர்த்தா ரெல்லாம் !
வேலிக்குள் இருந்த போதும்
விழிக்குநீ விருந்தே யானாய் !
கோலஞ்செய் மலரே ! உள்ளக்
குளிர்மையே ! உனது வாழ்வு
மாலையின் அளவே ! வாழும்
மக்களேன் நினைப்ப தில்லை ?
2
காலையில் வந்துன் வீட்டார்
களிப்போடு பார்ப்பார் ! வீட்டு
வேலையில் மனம்போ னாலும்
உன்மீது விழிப்பே உண்டாம் !
சோலையின் அழகே ! நெஞ்சில்
துளிர்த்திடும் இன்ப ஊற்றே !
மாலையில் உதிர்ந்தாய் ! உன்னை
மக்களேன் நினைப்ப தில்லை ?
5