பக்கம்:எழிலோவியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


ஒரு கவிஞன் பேரும் புகழும் பெற்றிருக்கும்போது அதே காலத்தில் மற்றொரு கவிஞன் பேரும் புகழும் பெற்று விளங்க இயலாது என எண்ணுவது தவறு. சங்க காலத்தில் ஒரே சமயத்தில் பல கவிஞர்கள் இருந்து பலப்பல வகையிலே மக்களுக்குத் தம் அரிய பாக்களால் மகிழ்ச்சியை ஊட்டியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலக் கவிஞனைப் பாராட்டுகின்றவர்கள் மில்டன், டென்னிசன், ஷெல்லி முதலிய கவிஞர்களைப் பாராட்டத்தான் செய்கிறார்கள். மக்களின் உள்ளத்தைக் கவரும் வகையில் புது முறையில் பாடத் துவங்கிய பாரதியார் பாடலைக் கண்டு மற்றப் புலவர்களெல்லாம் பாடாமல் இருந்துவிடவில்லை. பாரதியாரினும் சிறந்த கவிஞர்கள் இந்தக் காலத்திலே தோன்றி வருகிறார்களென்றால் அது நம்பத்தகாத ஒரு செய்தியன்று. பாரதியாரின் மாணவராய் பாரதியாராலேயே பாராட்டப்பெற்ற பாரதிதாசரின் புதுமைப் பாடல்களைப் பாராட்டாமல் இருக்க எவரால் இயலும்? 'துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தது' என்னும் உலக வழக்குக்கு ஏற்பச் சிலச்சில பகுதிகளில் நமது பாரதிதாசன் பாரதியாரினும் விஞ்சி மிளிர்கின்றார். அவ்விதம் அவர் திகழ்வது பாரதியாருக்குப் பெருமையே அன்றி இழுக்காகாது. அதே தன்மையில் நம் நாட்டிலே மற்றொரு புலவர் வாணிதாசர் என்னும் புனை பெயருடன் நெஞ்சையள்ளும் அழகிய பாடல்களால் அரிய கருத்துக்களைத் திறமையாக அமைத்துப் பாடி வருகின்றார் என்பதைத் தமிழ் நாட்டிலுள்ள அறிஞர்களுள் பெரும்பாலோர் அறிந்திருக்கின்றனர்.

வாணிதாசனார் பாரதிதாசரின் அடிச்சுவடைப் பின்பற்றியவர். ஆதலால், அவருக்கு வரும் புகழ் எல்லாம் பாரதிதாசனையேச் சாரும். பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன் ஆகிய இந்த மூவரும் மூன்று விதமான தன்மையில் கவி புனைந்திருக்கின்றனர். பாரதியார் அந்தக் காலத்துக்கு ஏற்ப மக்களின் சுதந்தர உணர்ச்சியினைத் தட்டி எழுப்பும் வகையில் பாடினர். பாரதிதாசனின் பாடல்கள் பெரும்பாலும் சீர்திருத்த நோக்குடையன. வாணிதாசன் அவர்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/8&oldid=1300742" இலிருந்து மீள்விக்கப்பட்டது