பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

புது யுகத்தின் வெள்ளி முளைப்பு என்றும், தமிழ் மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்றும், மறுமலர்ச்சிக்குப் பொன் ஏர் பூட்டியவன் என்றும் பிற்காலத்தில் பலவாறு போற்றப்பட்டு - தமிழ் எழுத்தாளர்களால் தங்கள் முன்னோடி எனவும், வழிகாட்டி என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட - மகாகவி சுப்பிரமணிய பாரதி பத்திரிகைகள் மூலம் தான் உணர்ச்சிக்கனலும், சிந்தனைச் சுடரும், அறிவொளியும் பரப்பினார்.

‘சுதேசமித்திரன்’ நாளிதழ் வாயிலாகக் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிய அவர், தமது இதய ஒலியை அழுத்தமாக எடுத்துச் சொல்வதற்காக ‘இந்தியா’ ‘சக்கிரவர்த்தினி’ போன்ற பத்திரிகைகளை நடத்தியது வரலாறு ஆகும்.

அவரது சமகாலத்தவரான வ. வெ. சு. ஐயர் (வ. வெ. சுப்பிரமணிய ஐயர் ) தீவிர அரசியல்வாதியாகவும், உயர்ந்த ரசிக உள்ளம் பெற்ற இலக்கியவாதி ஆகவும், நல்ல படைப்பாளியாகவும் விளங்கினார். தமிழ்மக்கள் மேன்மையுறுவதற்கு வீரமும் ஞானமும் பெற்றாக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதற்காக ‘பாலபாரதி’ என்ற பத்திரிகையை நடத்தினார்.

மக்களுக்கு வீர உணர்ச்சி புகுத்துவதற்காக, மராட்டிய மன்னன் வீரசிவாஜி, மகா அலெக்சாந்தரை எதிர்த்துச் சமரிட்டுத் தோல்வி கண்ட போதிலும் தலைவணங்காது நின்ற மாமன்னன் சந்திரகுப்தன்; மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆகியோரது வரலாற்றை உணர்ச்சி ததும்பும் நடையில் கட்டுரைகளாகவும் அவர் எழுதினார்.

தமிழ்ச் சிறுகதையை, மேல்நாட்டு இலக்கிய உத்திகளைப் பின்பற்றி, தற்காலப் பாங்கும். இலக்கிய வடிவமும்