பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


சலியாத உழைப்போடும் எழுத்துத் துறையில் ஈடுபடுகிறவர்கள் நிச்சயம் வெற்றிபெற முடியும். அவர்களுடைய, எழுத்தும், அவர்கள் நடத்துகிற பத்திரிகையும் தனித் தன்மையோடு பயனுள்ள முறையில் ஒளிர்வது சாத்தியமாகும்.



6

 

தமிழ்நாட்டில், வியாபார நோக்குடன் நடத்தப்படுகிற பத்திரிகைகள் லட்சம் லட்சமாக வாசகர்களைத் தயாரித்து விட்டிருக்கின்றன.

ஆனாலும், கனமான, சிந்தனைக்கு வேலைவைக்கிற, அறிவு வளர்ச்சிக்குத் துணைபுரிகிற, மக்களுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யக்கூடிய, ஆழ்ந்த விஷயங்களைக் கொண்ட புத்தகங்களையும், இலக்கியப் பத்திரிகைகளையும் விரும்பிப் படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை ஒரு சில ஆயிரத்துக்குள் அடங்கி விடுகிறது.

வாரம் தோறும், சில பத்திரிகைகள், பல லட்சம். பிரதிகள் அளவில் விற்பனையாகிற போது, நல்ல புத்தகங்கள் —நாவல், சிறுகதை, கட்டுரைத் தொகுப்புகள்—ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்கு நான்கு வருட காலம் தேவைப்படுகிறது. இது ஒவ்வொரு பிரசுரகர்த்தரின் அனுபவமாக இருந்துவருகிறது.

இந்த நிலைமை மொழிக்கும் நாட்டுக்கும் பெருமை தரக் கூடியதாக இல்லை.