பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


எனவே பரவலாக நாட்டின் - உலகத்தின் செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புகிற ஒருவர் ஒரு பத்திரிகை மட்டும் படித்தால் போதாது; அநேக பத்திரிகைகளைப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

அப்படியே பார்த்தாலும் முமுமையாக விஷயங்களை தெரிந்து கொண்ட நிறைவு ஏற்படுவதும் இல்லை.

தற்காலத்தில், அனைத்துப் பத்திரிகைகளும் விஷயத்துக்கு அளிக்கிற முக்கியத்துவத்தை விட விளம்பரங்களுக்கே அதிக கவனிப்பும் முக்கியமும் தருகின்றன. காரணம், விளம்பரங்களின் மூலம் அவற்றுக்கு நல்ல வருமானம்; அதனால் பத்திரிகை அதிபர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டில் எத்தனையோ மாறுதல்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன; இப்பவும் ஏற்பட்டவாறு இருக்கின்றன. அவற்றில் அநேகம் உண்மையான வளர்ச்சியாக, மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவனவாக இல்லை.

பத்திரிகைத் துறையில், கால ஓட்டத்தில், ஏற்பட்டு வந்திருக்கிற மாற்றங்களும் வளர்ச்சியும் அப்படிப்பட்டவை தான்.