44
பத்திரிகை ஒரு தொழிலாகக் கருதப்பட்டு, லாபகரமான முறையில், பெரிய அளவில் வளர்க்கப்பட்டு விட்டது நாட்டில்.
லாபம் தரக்கூடிய தொழில் முயற்சியில் போட்டியிட்டுக் கொண்டு பண அதிபர்கள் ஈடுபடுவது இயல்பு. அந்த ரீதியில் பத்திரிகைத் துறையிலும் ஒன்றை பின்பற்றி ஒன்று, இரண்டு, மூன்று என்று பலப்பல பத்திரிகைகள் நடத்தப் பட்டு வருகின்றன.
ஆனால், எழுத்து தொழில் முறையில் வளர்வதில்லை. எழுத்தை ஒரு தொழிலாகக் கொண்டு பலப்பலர் வாழ்க்கை நடத்த இயலாது.
எழுத்தை தொழிலாக ஏற்று, திட்டமிட்டு, இயந்திர ரீதியில் உழைத்து, வெற்றி காண முயல்கிறார்கள் ஒரு சில எழுத்தாளர்கள். குறித்த சில காலத்துக்கு வெற்றியும் அடைகிறார்கள். பத்திரிகைகளின் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்து கொண்டிருக்கிற வரை அவர்கள் ஒளிமயமாகப் பிரகாசிக்கிறார்கள்.
ஒருவரைப் போலவே வேறு சிலர் எழுத்தில் வெற்றிகரமாக வளர்ந்து, போட்டியிட்டு, பத்திரிகைகளுக்காகத் தனி உத்திகளைக் கையாண்டு, தங்கள் எழுத்தை வசீகரமும் கவர்ச்சியும் இனிமையும் புதுமையும் நிறைந்ததாகச் செய்து, வாசகர்களின் அபிமானத்தைப் பெறுவது சாத்தியமாகி விடுகிறது.
இந்நிலையில், பத்திரிகைப் பிரதிகளின் அதிகபட்ச விற்பனையிலேயே கண்ணாக இருக்கிற பத்திரிகை அதிபர்கள் - எப்பவும் வாசக உலகின் நாடியை - பத்திரிகையின் சர்குலேஷனின் ஏற்ற இறக்கங்களை வைத்துக் கணக்கிட்டுக்