பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இம்முறையால். கவிதையைத் தேக்கிக் காட்டமுடியாதென்பதற்குத் தகுந்த காரணங்களை யாரும் சொல்லவில்லை. மனிதனால் சந்திரனுக்குப் போக முடியாதென்று கூற யாரும் இன்று துணிவு கொள்ள மாட்டார்கள். புறவுலகில் சாத்யமற்ற தென்று கருப்படுவது சாத்யமாகும் பொழுது மனத்துறையில் மட்டும் புதுமை ஏன் சாத்யமாகக் கூடாது? யாப்புக்கிணங்கிக் கவிபுனைபவர்களில் சொத்தை சொள்ளைதோன்றுவதுபோல வசன கவிதைத்துறையிலும் இருக்கலாமே ஒழிய, புது முறைக்கே தோல்வி ஏற்பட்டு விட்டதாக தர்க்க ரீதியாகக் கொள்ள முடியாது. கருத்துக்களின் இசைவே, உணர்வின் சலனமே, கவிதா சிருஷ்டியின் ஒருமையே புதுக்கவிதையாகும்.

“ரவி, மதி, தாரகைக்கு வணக்கம்' என்று எட்வர்ட்கார்ப் பெண்டர் என்னும் அமெரிக்கக்கவி 'ஜனநாயத்தை நோக்கி' என்னும் நீண்ட கவிதையைத் தொடங்குகிறார். இவ்வரியை ஒரு நிமிஷம் கவனிக்கலாம் இது நம்முடைய அறிவுக்கு எந்தச் செய்தியையும் சொல்லவில்லை. எந்தப் பொருளையும் குறிப்பிடவில்லை. ஆனால் நமக்குப் புதிய உண்மை ஒன்றை மறந்து போனதை நினைவூட்டுவதென்றாலும் சரிதான் இது கூறுகிறது. புதிய கதவம் ஒன்றைத் திறந்து உலக சிருஷ்டியுடன் நமக்கிருக்கும் உறவு முறைகளைக் காட்டுகிறது. சிருஷ்டியின் பெரு வெளியில் நம்மைப் போல் செல்லும் சகப் பிராணிகள் இருப்பதையும், நாமும் அவர்களும் சேர்ந்து ஒரே நோக்குடன் தோழமையுடன் இயங்குவதையும் சுட்டிக்காட்டி,குசலம் விசாரித்து, வணக்கம் செலுத்துகிறது. சிருஷ்டி என்னும் மகத்தான இயக்கத்தில் இசைவு பெற்றுள்ளவன்தான் கவி, அவற்றுத்தான் கவிதை என்ற உண்மையை நாம் உணர்கிறோம். கவிதைக்குப் பிறப்பிடமான ஒருமையும் இசைவையும் உணர்கிறோம். எனவே, இவ்வரியைப் படித்ததும் ஊன் பொதிந்த குறுகிய குடிசையில் தொல்லைப்படும் நம் சிற்றுணர்வு விடுதலை பெற்று விரிந்து பறக்க உதவிய இவ்வனுபவத்தைக் கவிதை என்று உணர்கிறோம்.

இதே அகண்ட இசைவைத்தான், கவிதைத்தன்மையைத்தான், பாரதியாரின் 'காட்சி'யிலும் காண்கிறோம். வசன கவிதைக்கு இதுவே மற்றொரு சிறந்த உதாரணமாகும்.

217