பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புதுக்கவிதை பற்றி


பிச்சமூர்த்தி கட்டுரை பிரசுரமானதற்குப் பிறகு, எழுத்து. ஏட்டில் கவிதை, வசனகவிதை பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இடம் பெற்றன. 'எழுத்து' 15-வது ஏட்டில் தலையங்கப் பகுதியாக, ஆசிரியர் தனது எண்ணங்களை வெளியிட்டிருந்தார். எழுத்து அரங்கம். பகுதியில் இலங்கை ஆர். முருகையனும், திருப்பத்தூர் பொ. சுந்தரமூர்த்தி நயினாரும் தங்கள் கருத்துக்களை விரிவாக எழுதியிருந்தனர். எஸ். முருகையன் எழுதிய 'கவிதைக் கலை' என்றொரு கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. 'ஃப்ரிவெர்ஸ்' பற்றிய அரைப்பக்க விளக்கம் ஒன்றும் காணப்பட்டது.

புதுக்கவிதை வேறு, வசன கவிதை வேறு என்று பிரித்துப்பேச முற்பட்ட 'எழுத்து' ஆசிரியர், ந.பி.யின் சில அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை வலியுறுத்தியது குறிப்பிடத் தகுந்தாகும். அதன் முக்யத்துவம் கருதி, 'புதுக்கவிதைபற்றி' என்ற எழுத்து (மார்ச் 60) தலையங்கக் கட்டுரையை அப்படியே தருகிறேன்.

"கற்பனை எழுத்து உருவ வகைகளில் கவிதைதான் மிகச் சிறந்த வெளியீட்டு சாதனம் என்று சொல்லப்படுகிறது. கவிதையின் பாஷையே ஒரு தனித்தன்மை கொண்டது. ஒசை நய வார்த்தைகள், வார்த்தை தொடர்களால் அமைந்த ஒரு தனிச் சிறப்பான அமைப்பு முறைகளைக் கொண்டு, தனித்து குறிப்பிடப்படுவது. வாழ்க்கையும் மனோபாவனையும் ஒரு கலைப்பாங்கான உள்ளத்தில் பொறிகளால் பாதிக்கப்பட்ட சில மனப் பதிவுகளை ஏற்றுகின்றன. இந்த மனப்பதிவுகளை உணர்ச்சி ரீதியாக உரைத்துப்பார்க்கும் கவிஞன் அதை மொழியின் மூலம் இறுகிய, உறைந்த நடையில் கொடுக்கிறான். இந்த நடையில் அர்த்த வலுடன் செழிப்புடன் ஒரு அழகும் இருக்கிறது. அழகுடன் ஒரு இசைத்தன்மையும் (மியூசிகாலிட்டி) இருக்கும்.

219