பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

இங்கிலீஷ் மொழியில் செய்யப்பட்டு வரும், முப்பது வருஷங்களுக்கு முன்பு சோதனையாக ஒரு இலக்கிய இயக்கமாகவே ஆரம்பித்து செய்யப்பட்ட 'ஃப்ரி வெர்ஸஸ்' என்ற சொல்லின் அர்த்தமாக கருதப்பட்டு உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசனம் என்ற, கவிதைக்கு மாறுபட்ட, ஒரு பதத்தை அதில் இணைத்திருப்பதால் தெளிவான ஒரு பொருளுக்கு, வியாக்கியானத்துக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. இந்த பதச்சேர்க்கையை முன் வைத்தே வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. வசன கவிதை என்பது ‘கோவேறு கதை’ “விஜிடபிள் பிரியாணி என்ற பரிகாசமாக பேசப்படுகிறது. புதுக்கவிதை முயற்சி என்றால் அது வசனகவிதைதான், 'யாப்புக்குப் புறம்பான' 'வசனத்தை ஒடித்துப்போட்டு எழுதுவதுதான்' என்று முடிவு கட்டப்படுகிறது.

புதுக்கவிதைகள் வசன கவிதைகளாகத்தான் இருக்கும் என்று கருதுவதற்கு இல்லை. வசன கவிதைகள் எல்லாம் புதுக் கவிதைகள் என்று சொல்லி விடவும் முடியாது. புதுக்கவிதைகள் உருவ அமைப்பில் மட்டுமல்ல; உள்ளடக்கம் சம்பந்தமாகவும் சில புதிய இயல்புகளைப் பெற்றிருப்பதாகும். சோதனை கு.ப.ரா. கூறியுள்ள அலங்கார அம்சங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. ஒரு கலைஞனை உடன்நிகழ்கால வாழ்க்கை பாதித்து அவனை உணர வைத்திருப்பது. வாழ்க்கையிலும் கலையிலும் மதிப்புத் தரநிலை தேடுவது இவைகள் சம்பந்தமாகவும் உண்டு. எனவே வசன கவிதையையும் புதுக் கவிதையையும் வித்தியாசப்படுத்திக் கொள்வதுதான் முறையானதாகும். குழப்பிக் கொண்டால் தற்காலக் கவிதை சம்பந்தமாக ஒரு அபிப்பிராயம் விழுவதற்கு இடமே ஏற்படாது போய்விடும்.

இதில் இன்னொரு விசேஷம். வசன கவிதைக்கான சில இலக்கண அம்சங்களை கூற ஒருவர் முற்படும்போது புதுக்கவிதைக்கான சில நியதிகளையும் அதில் நாம் காண்கிறோம். கு.ப.ரா. வசன கவிதை பற்றி சொன்னாலும் புதுக்கவிதை பற்றிய விளக்கமாகவே அது இருக்கிறது. பிச்சமூர்த்தியின் வாதத்திலும் சில புதுக்கவிதை சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. புதுக்கவிதை சம்பந்தமாக புதுமைப்பித்தன் கூறியுள்ள சில வரிகளைப் பார்ப்போம்.

222