பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


‘ரூபமில்லாமல் கவிதை இருக்காது. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளதென்று கொள்ளவேண்டும். இன்று ரூபமற்ற கவிதையென சிலர் எழுதி வருவது இன்று எவற்றையெல்லாம் ரூபம் எனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் எனக் கொள்ள வேண்டுமேயொழிய அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை.'

இப்படி அவர் கூறும்போது மரபானவை என்று நாம் கருதி உள்ள உருவ வகைகளை வைத்து புதுக்கவிதை முயற்சிகளை மதிப்பிடக்கூடாது என்று அவர் கருதுவதாகத்தான் படுகிறது. அத்துடன் கவிதைக்கு உரிய (கு.ப.ரா குறிப்பிட்ட அலங்காரங்களுடன் கூடிய) கவிதைக்கு கரு, கருத்து இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார். ஆனால் அவர் இன்று வசன கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கையில் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல’ என்றும் கூறி இருக்கிறார். புதுக் கவிதையையும் வசன கவிதையையும் அவர் பிரித்துப் பேசி இருப்பது தெரிகிறது.

யாப்புக்கும் கவிதை நடைக்கும் உள்ள உறவு பற்றி கூறுகையில், ‘யாப்பு' முறையானது, பேச்சுஅமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்கும் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைச் சேர்ப்பதல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். மேல்நாட்டு புதுக்கவிதை முயற்சிகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, பேச்சு வழக்கில் உள்ள இசைவான வார்தைகளையும் வார்த்தைத் தொடர்களையும் கவிதையில் நிறையப் புகுத்துவது. பேச்சு அமைதியையும் புதுக்கவிதைகளில் காண முடியும். எனவே புதுக்கவிதைகள் அமைவதற்கு உதவுபவைகளில் சொற்களின் முக்யத்வம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கவிதைக்கு ஒலிநயம் போலவே சொல் அமைவும் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை காட்டும் பின்வரும் கு.ப.ரா. வின் கவிதை வரிகள்.

கவிகள் களைப்பின்றி காவியமியற்ற
நின் கண்கள் என்ன நிலைக்காக் கவர்ச்சியில்

223