பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வளர்ச்சி


பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு 'காட்டு வாத்து’ புதுக்கவிதைகளின் தொகுப்பான 'புதுக்குரல்கள்' ஆகிய புத்தகங்கள் வெளிவந்த பின்னர், புதுக்கவிதையை ஆதரித்தும், குறை கூறியும் எதிர்த்தும் அபிப்பிராயங்கள் பரவலாயின.

பழந் தமிழ் இலக்கியத்தில் நல்லதேர்ச்சியும் புதுமை இலக்கியத்தில் ஈடுபாடும் கொண்ட ச.கனகசபாபதி புதுக்கவிதை பற்றி 'எழுத்து' இதழ்களில் விரிவான கட்டுரைகள் எழுதினார். 'எழுத்து' ஐந்தாம் ஆண்டில் (1953) இவை பிரசுரமாயின.

‘காட்டு வாத்து' தொகுதி பற்றியும் ந.பியின். கவிதைத் திறன் பற்றியும் அவர் புது மனிதனுக்குப் பாடும் பழமை வழிவந்த புதுயுகக் கவிஞன்' என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்று எழுதினார்.

(எழுத்து ஏடு 49)

‘இன்றைய மனக்குரல் வகைக்கு ஏற்ப ஒலிக்கும்' புதுக்கவிதைகளின் தொகுப்பை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை எழுத்து 51-வது ஏட்டில் வந்தது.

‘கவிதை கதையாக இருந்திருக்கிறது. வரலாறாக இருந்திருக்கிறது. மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிடும் முயற்சியே புதுக்கவிதை என்ற ந.பிச்சமூர்த்தியின் கருத்துக்கு விளக்கமும் விரிவுரையுமாக அமைந்திருக்கிறது கனகசபாபதியின் ஆய்வு.

‘காலந்தோறும் கேட்கும் குரல் வகை புதியது. ஒரு காலத்துக் குரல் வகை போல் அடுத்த கால, அதற்கு முன் காலக்குரல் வகை இருப்பதில்லை. சங்க காலம்,சங்கம் மருவிய காலம் என்றவாறு காலப் பாகுபாடு செய்துகொண்டு பார்த்தால் அவ்வப்போது புதுப்புதுக் குரல்வகை கேட்டது அகச்செவியில் படும்.

250