பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறை கூறல்


க.நா.சுப்ரமண்யம் 1964ல் 'இலக்கிய வட்டம்' என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

அதன் 17வது இதழ் 'தமிழ் இலக்கியத்தில் சாதனை'யை அளவிடும் விசேஷ மலராகத் தயாராயிற்று. 1947-64 காலகட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து, தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், தி.க. சிவசங்கரன், துலன், வெ. சாமிநாதன் ஆர். சூடாமணி, தெ.பொ.மீனாட்சித் சுந்தரன், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கில் அபிப்பிராயங்கள் அறிவித்து கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.


தி.க.சிவசங்கரன் 'பதினேழு ஆண்டில் இலக்கியம்' என்ற தலைப்பில், சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், நாடகம் என்று பகுத்து, விரிவாகத் தனது கருத்துக்களை அறிவித்திருந்தார். அதில் புதுக் கவிதை பற்றி அவர் கூறியது இங்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டிய கருத்து ஆகும்.

“புதுக்கவிதை குறித்து என் கருத்து யாது?

புதுமை, சோதனை என்ற முறையில் நான் புதுக்கவிதையை வரவேற்கிறேன்; திறந்த மனத்தோடு புதுக் கவிஞர்களின் படைப்புக்களைச் சுவைக்கிறேன்.

புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபலன், பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், கே. ராமநாதன் ஆகியோரின் புதுக்கவிதைகளை ‘கலாமோகினி’, ‘கிராமஊழியன்’, ‘சிவாஜி', 'நவசக்தி' ஆகிய இதழ்களில் அவை வெளிவந்த காலம் தொட்டு வாசித்து வருபவன் நான்.

அண்மையில் ஆறு ஆண்டுகளாக 'எழுத்து' இதழ்களிலும், பின்னர் 'இலக்கிய வட்ட'த்திலும் இடைவிடாது படித்து வருகிறேன்.

263