பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



எனினும், வாய்த்த தனிமையை செல்லப்பா நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் எழுத எண்ணியிருந்த பலவற்றையும் எழுதி முடித்தார். முக்கியமாக, அரைவாசி எழுதிக்கிடப்பில் போட்டிருந்த 'சுதந்திரதாகம்’ நாவலை எழுதி நிறைவு செய்ய முடிந்தது அவரால்.

இருப்பினும், அந்த சூழ்நிலை அவருக்கு ஒத்துப்போகவில்லை. குடும்பத்தில் சகஜமாக எழக்கூடிய சிறு சிறு பிணக்குகள் அவர் உள்ளத்தை பாதித்தன. அதனால் மகனோடு சண்டை பிடித்துக்கொண்டு அவர் மீண்டும் தனி வாழ்க்கை நடத்த சென்னைக்கே வந்து சேர்ந்தார்.

சென்னையில், அதுவும் திருவல்லிகேணிப்பகுதியில் வசிக்கையில் கிடைக்கிற சூழலும் மனநிம்மதியும் மற்றஇடங்களில் எனக்குக்கிடைக்கவில்லை. இனி சாகிற வரை இங்கேதான் என்று சொன்னார் செல்லப்பா.

அவ்வாறே நிகழ்ந்தது. 1998 டிசம்பர் 18ஆம் நாளன்று, திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் முதல் தெருவில் அவர்வசித்த வீடடில் செல்லப்பாவை மரணம் தழுவியது.

26